ARTICLE AD BOX
போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.
உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.
அப்போது, உக்ரைன் அதிபரிடம் டிரம்ப் கூறியதாவது: நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள்? நீங்கள் இந்த நாட்டை அவமதிக்கிறீர்கள். 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டனர். அது மட்டும் இல்லை என்றால் போர் ஒரு வாரத்தில் முடிந்திருக்கும்.
ரஷ்யா உடன் போரில் உக்ரைன் வெல்லப்போவதில்லை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியால் மூன்றாம் உலக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு டிரம்ப் கடுமையாக சாடினார். பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், 'நன்றி இல்லாமல் நடந்து கொள்வதாக உக்ரைன் அதிபர் மீது குற்றம் சாட்டிய டிரம்ப், உக்ரைன் குழுவினரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற உத்தரவிட்டார். இதனால் பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும், வெள்ளை மாளிகையில் நடந்த விருந்தில் பங்கேற்காமலும் ஜெலன்ஸ்கி கிளம்பி சென்றார்.
வெள்ளை மாளிகையில் நடந்த வாக்குவாதத்துக்கு பிறகு செய்தி நிறுவனத்திடம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, 'அமெரிக்க அதிபரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையில்லை என்று நான் கருதுகிறேன்' என்று கூறினார்.
ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ, 'உக்ரைன் அதிபர் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறினார்.