ARTICLE AD BOX
முன்னாள் எஸ்.ஐ. ஜாகீர் உசைன் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் 3 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முன்னாள் எஸ்.ஐ. ஜாகீர் உசைன். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றிய இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்று நெல்லையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், ரமலான் மாதத்தை முன்னிட்டு அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு தெற்கு மவுன்ட் சாலை வழியாக ஜாகீர் உசைன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் ஜாகீர் உசைனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
முன்னதாக ஜாகீர் உசைன் வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக, சில நாட்களுக்கு முன்பு ஜாகீர் உசைன் பேசிய காணொளி வெளியாகியிருக்கிறது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர், திருநெல்வேலி 4-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனிடையே, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி நூருண்ணிசா ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இருவரும் வெளி மாவட்டத்திற்கு தப்பியோடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.