ARTICLE AD BOX
Jayapradeep Support Sengottaiyan: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் அதிகாரப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை செங்கோட்டையன் புறக்கணிப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவையே திருப்பி பார்க்கும் வகையில் அதிமுகவை மிகப்பெரிய கட்சியாக உருவாக்கியவர் ஜெயலலிதா. ஆனால் அவரது மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார போட்டியால் கட்சியானது நெல்லிக் காய் போல சிதறிக்கிடக்கிறது. அதுமட்டுமல்லாமல் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. எந்த பாகுபாடின்றி அனைவரும் ஒற்றிணைய வேண்டும் ஓபிஎஸ், டிடிவி.தினகரன், சசிகலா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். ஆனால் ஒருபோதும் இவர்கள் மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என இபிஎஸ் தரப்பு கூறிவருகிறது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கடந்த மாதம் கோவையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறததால் அதிருப்தி அடைந்த மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் புறக்கணித்தார்.

இதனையடுத்து ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் இபிஎஸ் பெயரை ஒரு இடத்தில் கூட செங்கோட்டையன் உச்சரிக்கவில்லை. அதுபோல எஸ்.பி. வேலுமணியின் இல்லத்திருமண விழாவில் இபிஎஸ் வருவதற்கு முன்னதாகவே செங்கோட்டையன் வந்து சென்றார். அவர் சந்திப்பை புறக்கணிக்கவே செங்கோட்டையன் இதுபோன்று செய்ததாக செய்தி வெளியாகின.

இந்நிலையில் இபிஎஸ் செங்கோட்டையன் மோதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெட்ட வெளிச்சமானது. அதாவது பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாகவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. 2வது நாளில் கூட்டத்தில் பங்கேற்காமல் சபாநாயகர் அப்பாவுடன் சந்தித்து பேசினார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, ஏன் என்னை சந்திப்பதை தவிர்க்கிறார் என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள் என்று கூறி பரபரப்பை எற்படுத்தினார்.

இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஏற்கனவே டிடிவி.தினகரன், ஓபிஎஸ் இருந்து வரும் நிலையில் அதிமுகவின் உண்மை தொண்டன் செங்கோட்டையன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கொங்கு நாட்டு தங்கம். எனது அரசியல் குருமார்களின் ஒருவர். கழகத்தின் உண்மை தொண்டன். அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் மனசாட்சியின் உணர்வுகள் வெளிப்பட தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.