ARTICLE AD BOX
பஞ்சாப் மாநிலத்தில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர்ம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பின் சங்ரூரில் உள்ள ஒரு கோவிலில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. முகாமை ஏற்பாடு செய்தவர்கள் இந்த சிகிச்சை மூலம் முடி உதிர்வது தடுக்கப்பட்டு வழுக்கை ஏற்படாமல் பாதுகாக்கலாம் என்று விளம்பரம் செய்துள்ளனர். இதனால், அங்கு தரப்பட்ட எண்ணெயை பலரும் வாங்கிச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, வாங்கிச் சென்றவர்கள் அதைப் பயன்படுத்தியபோது கண் எரிச்சல் போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டுள்ளனர்.
இதுவரை பாதிக்கப்பட்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தப் பிரச்னை தொடர்பாக முகாமை நடத்திய இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் முறையான மருத்துவச் சான்றிதழோ, இந்த சிகிச்சைத் தொடர்பான சிறப்பு அனுமதியோ எதுவும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு!
”முகாம் நடத்தியவர்களின் அலட்சியமான நடவடிக்கை தொடர்பாக சுகாதாரத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்“ என சங்ரூர் சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சஞ்சய் கம்ரா உறுதிப்படுத்தினார்.
இதுபோன்ற சான்றளிக்கப்படாத மருத்துவ முகாம்களைத் தவிர்க்கவும், எந்தவொரு சிகிச்சை அல்லது மருந்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறவும் பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.