ARTICLE AD BOX
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், ஒரு படகில் கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 10 பேரை கைது செய்ததோடு, படகையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றது. கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணை முடிந்தபின், மன்னார் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்னர். மேலும் இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோல் கடந்த வாரம், கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
அப்போது இலங்கை கடற்படையின் துப்பாக்கியை பறிக்க முயன்றதால் எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர், பின்னர் காயமடைந்த 2 மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்கள் இருவருக்கும் பெரியதாக காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.