ARTICLE AD BOX
சென்னை,
தமிழக பட்ஜெட் கடந்த 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வேளாண் பட்ஜெட் 15-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., பா.ஜனதா உறுப்பினர்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.
உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று பதில் அளித்து பேசினர். சட்டசபைக்கு இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையாகும். திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது.
அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கேள்வி நேரமும், அதனை தொடர்ந்து மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்க இருக்கிறது. அதன்படி முதல் மானியக்கோரிக்கையாக நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை இடம் பெறுகிறது. இதில் எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதி சார்ந்த கோரிக்கைகள் குறித்து பேசுகின்றன. உறுப்பினர்கள் பேசி முடித்த பிறகு, அமைச்சர் துரைமுருகன் பதில் உரையும், துறை சார்ந்த அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.