ARTICLE AD BOX
மும்பை,
கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் இங்கிலாந்து வாழ் இந்தியரான சச்சின் நந்தா எழுதிய 'ஹெட்கேவர் (ஆர்.எஸ்.எஸ்.நிறுவனர்) - வாழ்க்கை வரலாறு' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தியா கடந்த காலத்தில் ஒருபோதும் ஒரே மாதிரியான நாடாக இருந்ததில்லை என்று கூறுவதை எதிர்க்கிறேன். பேரரசர் அசோகர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டத்தை ஒன்றிணைத்தார். கலாசார ரீதியாகவும் பாரம்பரியமாகவும், இந்தியா எப்போதும் ஒரே நாடாகத்தான் இருந்தது. அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவை பிரித்து அதை ஆள முடிந்தது. சில மாநிலங்களில் இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவர் முன்வைத்த ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனைகள் முன் எப்போதையும் விட தற்போது மிகவும் பொருத்தமானவையாகும். ஆர்.எஸ்.எஸ் தனது நீண்ட மற்றும் புகழ்பெற்ற பயணத்தில் நூற்றுக்கணக்கான தேசபக்தர்களை உருவாக்கியது. அவர்கள் தன்னலமின்றி வாழ்ந்து தேசத்திற்காக இறந்தனர். தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர். இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.