ARTICLE AD BOX
இந்த வருடம் நமது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அடுத்த வருடம் உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கப்போகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
கமல்ஹாசன் பேச்சு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ஆம் ஆண்டு தொடக்க விழா ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், உயிரே, உறவே, தமிழே வணக்கம் என்று சொல்கிறேன். நான் வாழ்வில் உணர்ந்த உண்மையை பேசும் வார்த்தைகள் அவை. எனது சிந்தனையும், எனது கலையும் தன்னம்பிக்கை உடன் உயிர்த்து இருப்பதற்கு தமிழக மக்களே காரணம். சில உறவுகள் 10 ஆண்டுகள் தாங்கும், சில உறவுகள் 2 நாட்களில் முறிந்துவிடும். நண்பன் என்று சொல்லி வருபவன், எதிரி ஆகிவிடுவான். இதை நான் 50 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். எனது தாய், தந்தை, சகோதர சகோதரிகளுக்கு பிறகு இவ்வளவு நீளம் நீடித்த உறவு இதுதான்.
தமிழை யாராலும் இறக்க முடியாது!
தமிழே என்று நான் சொல்வது எனது மொழியை மட்டுமல்ல; உங்கள் மொழியையும்தான். நாம் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பவர்களும் அல்ல; கைக்கட்டி வேடிக்கை பார்ப்பவர்களும் அல்ல. இன்று உலகத் தாய் மொழிகளின் தினம். நம் மொழியின் குரல் வலையை பிடிக்க நினைப்பவர்கள் இது எப்படிப்பட்ட தினம் என்பதை உணர வேண்டும். தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் என்றார் பாரதிதாசன். அந்த தமிழை யாராலும் இறக்க முடியாது.
என்னை பற்றி பேசும் போது பலர், ‘தோற்று போன அரசியல்வாதி’ என்று சொல்கிறார்கள். நான் 20 வருடங்களுக்கு முன்பாக அரசியலுக்கு வந்து இருக்க வேண்டும். அப்போது வரத் தவறியதே எனக்கு தோல்வியாகபடுகிறது. அப்படி இருந்தால், இன்று நான் நின்று பேசிக் கொண்டிருக்கும் வார்த்தைகளும், இடமும் வேறாக இருக்கும்.
எந்த மொழி வேண்டும் என்பது தமிழர்களுக்கு தெரியும்
எங்கள் பணி, நம்முடிடைய பணி கடைசி ஒரு வாக்காளன் இருக்கும் வரை இருக்கும். மக்களுக்காக பணி செய்யும் எல்லா நாளுமே நல்லநாள்தான். எனக்கு எப்படி காந்தியாரை பிடிக்குமோ, அதே அளவு பெரியாரையும் பிடிக்கும். எனக்கு நிறைய ரசிகர்கள் சினிமாவில் இருந்து அரசியலில் சேர்ந்த பிறகு உள்ளார்கள். ஆனால் ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்று என் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டேன். இப்போது நாம் இக்காட்டான காலகட்டத்தில் உள்ளோம் என்று சொல்ல முடியாது. தமிழர்கள் இதை பார்த்து இருக்கிறார்கள். இந்தியை திணிக்க முயன்றதை தடுத்தவர்கள் இன்று நரைத்த தாடி உடன் நின்றுக் கொண்டு இருப்பார்கள் இந்த கூட்டத்தில். மொழிக்காக உயிரையே தமிழ்நாட்டில்விட்டு உள்ளனர். அதுபோன்ற விஷயத்தோடு விளையாட வேண்டும். தனக்கு எந்த மொழி வேண்டும்; வேண்டாம் என்பதை முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு. அது குழந்தைகளுக்கே உண்டு, அளவுக்கு மீறிய உணவை தாயார் ஊட்டினால் அக்குழந்தை முகத்தை திருப்பிவிடும், இல்லை என்றால் துப்பிவிடும்.
இந்த வருடம் நமது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அடுத்த வருடம் உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அதற்கு கட்டியம் கூறும் விழாதான் இது. மய்யத்தில் மாணவர்கள் இணைந்து கொண்டு இருக்கிறார்கள். மாணவர்கள் நம்மோடு இணைந்துவிட்டால், நான் சொன்ன நாளை நமதேவின் அர்த்தம் புரியும்.
