ARTICLE AD BOX
போபால்,
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு கர்நாடகாவை சேர்ந்த சிலர் ஜீப்பில் திரும்பி கொண்டிருந்தனர்.
அந்த ஜீப் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் உள்ள ஒரு மரத்தின் மீது மோதி, பின்னர் நெருஞ்சாலையின் மறுபுறம் குதித்து எதிர் திசையில் இருந்து வந்த பஸ் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் சிஹோரா நகரில் உள்ள ஒரு மருத்துவ மையத்தில் ஆரம்ப சிகிச்சைக்கு பிறகு ஜபல்பூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்த சிறிது நேரத்திற்கு பிறகு, பஸ் டிரைவர் தனது வாகனத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும், அவரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.