ARTICLE AD BOX
மங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் மங்களூருவில் இருந்து நாட்டின் தலைநகர் புதுடெல்லிக்கு நேரடி விமானம் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் மங்களூருவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சார்பில் தினமும் டெல்லிக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை 6.40 மணியளவில் மங்களூருவில் இருந்து 167 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புதுடெல்லிக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது. அந்த விமானம் புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் காலை 9.35 மணிக்கு தரையிறங்கியது. அப்போது அந்த விமானத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் புதுடெல்லியில் இருந்து மங்களூரு நோக்கி காலை 6.40 மணிக்கு ஒரு விமானம் 144 பயணிகளுடன் புறப்பட்டது.
அந்த விமானம் மங்களூரு விமான நிலையத்தை காலை 9.35 மணிக்கு வந்தடைந்தது. இதேபோல் மங்களூருவில் இருந்து இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் புதுடெல்லிக்கு மாலையில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மங்களூருவில் இருந்து புனேவுக்கு வார இறுதியில் 2 நாட்கள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.