ARTICLE AD BOX
சேலத்தில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்குச் சென்ற பாமக எம்எல்ஏ அருள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் ரூ.4.5 கோடியில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுவதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளை திமுகவினர் தடுத்து நிறுத்தித் தள்ளிவிட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இதையும் படிக்க | தமிழுக்கு முக்கியத்துவம்! தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!
பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளின் மூன்றாண்டு கால தொடர் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. ஒரு சட்டமன்ற உறுப்பினரை அவரது தொகுதிக்குட்பட்ட பகுதியில் அவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளக்கூட விடாமல் தடுப்பதுதான் பாசிசம் ஆகும்.
திமுகவினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் அருளை தாக்கியவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.