ARTICLE AD BOX
திருமலை: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் திரையிசை பாடல்களை பாடியுள்ளவர் பிரபல பாடகி கல்பனா. இவர் தெலங்கானா மாநிலம் ஐதாராபாத் நிஜாம்பேட்டையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் வசிக்கும் அவரது கணவர் பிரசாத் நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு பலமுறை போன் செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் போன் எடுக்காததால், கல்பனா வசிக்கக்கூடிய குடியிருப்பு சங்கச் செயலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களும் வீட்டின் கதவை தட்டியும் திறக்காததால், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த குட்கட்பள்ளி போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தூக்க மாத்திரைகள் விழுங்கி படுக்கை அறையில் கல்பனா சுயநினைவின்றி கிடந்தார். அவரை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு கல்பனாவுக்கு சுயநினைவு திரும்பியது. கல்பனா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அபாய கட்டத்தை தாண்டி இருப்பதாகவும் விரைவில் அவர் சகஜ நிலைக்கு திரும்புவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் போலீசார் கல்பனாவிடம் நடந்த விவரங்களை கேட்டறிய உள்ளனர். இதற்கிடையே நேற்று கல்பனா மகள் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது அம்மா தற்கொலை செய்ய முயற்சி செய்யவில்லை. மனஅழுத்தம் காரணமாக தூக்க மாத்திரைகள் சற்று அதிகளவில் எடுத்துக்கொண்டுள்ளார். தயவுசெய்து இந்த தகவலை மாற்றாதீர்கள். மேலும் தவறாக சித்தரிக்க வேண்டாம். எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனது அம்மா நலமுடன் இருக்கிறார். விரைவில் வீட்டிற்கு திரும்புவார்’ என தெரிவித்தார்.
The post பாடகி கல்பனாவிற்கு சுயநினைவு திரும்பியது: தற்கொலைக்கு முயலவில்லை என மகள் பேட்டி appeared first on Dinakaran.