ARTICLE AD BOX
சிந்து நதியில் சுமார் ரூ.80,000 கோடி மதிப்புள்ள தங்கப் படிவுகள் இருப்பதை பாகிஸ்தான் கண்டறிந்துள்ளது. இதில் இந்தியாவிற்கு என்ன தொடர்பு என்பதை பார்க்கலாம்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக் மாவட்டத்தில் கணக்கெடுப்பின் போது தங்கப்படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு திருப்பு முனையாக அமையலாம். பாகிஸ்தான் அரசு நடத்திய ஆய்வின்போது இது கண்டறியப்பட்டுள்ளது. தங்கத்தைப் பிரித்தெடுப்பதற்கான முயற்சிகளில் அந்நாடு ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவின் இமயமலையில் இருந்து இந்த தங்க இருப்புகளை சிந்து நதி கொண்டு வருவதாகவும், அவை பாகிஸ்தானில் பிளேசர் தங்கமாக குவிவதாகவும் புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வரலாற்று ரீதியாக இயற்கை வளங்கள் நிறைந்த சிந்து சமவெளிப் பகுதி, தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்களை நீண்டகாலமாக வைத்துள்ளது. அந்த பகுதிகளில் தங்கம் படிந்துள்ளதாக தகவல்கள் வந்ததால், அந்தப் பகுதியில் ஏற்கெனவே உள்ளூர் சுரங்க ஒப்பந்ததாரர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் பஞ்சாப் மாகாண அரசு இந்த விசயத்தில் தலையிட்டு அனுமதி இல்லாமல் சுரங்கம் தோண்டுவதற்கான தடை விதித்தது.
இந்த நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் பாகிஸ்தானின் வரி பற்றாக்குறை ரூ. 18,945 கோடி அதிகரித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளியாகி பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது தங்க இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது பாகிஸ்தானுக்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.