ARTICLE AD BOX
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன்-மீனா தம்பதியினரின் 2 வயது மகன் சிரஞ்சீவி விக்ரம், நேற்று மாலை வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு திறந்து கிடந்த நிலத்தடி நீர் தொட்டியில் விழுந்துள்ளார்.
நீண்ட நேரமாக குழந்தையை காணாததால் பதறிப்போன பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், குழந்தையை தீவிரமாக தேடியுள்ளனர். அப்போது நிலத்தடி நீர் தொட்டியில் குழந்தை விழுந்து கிடப்பது தெரியவந்தது.
உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.