ARTICLE AD BOX
புதுடெல்லி: இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபா் லக்ஸனை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசினார். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், பல்வேறு துறை அமைச்சர்களுடன் இந்தியாவுக்கு 5 நாள்கள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி – கிறிஸ்டோபர் லக்ஸன் இடையே விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய, சர்வதேச விவகாரங்கள், காலிஸ்தான் மீதான நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.
முன்னதாக, பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பு பாதுகாப்பு ரீதியிலான உறவை அமைப்பு ரீதியில் வலுப்படுத்த வழிவகை செய்யும் ஒப்பந்தம் கையொப்பமானது. மேலும், கல்வி, விளையாட்டு, வேளாண்மை, பருவநிலை மாறுபாடு, சுங்க வரி தொடர்பாக மேலும் 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியது. இந்நிலையில், டெல்லியில் இன்று காலை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடினார். அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ராகுல் காந்தி, ‘உலகளாவிய சவால்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதம் நடத்தினோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
The post நியூசிலாந்து பிரதமரை சந்தித்த ராகுல்: இருதரப்பு உறவு குறித்து விவாதம்! appeared first on Dinakaran.