ARTICLE AD BOX
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 2017-க்கு பிறகு கம்பேக் கொடுத்திருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் முதலிய 8 அணிகள் பங்கேற்றன.
பரபரப்பான கட்டத்திற்கு சாம்பியன்ஸ் டிராபி நகர்ந்திருக்கும் நிலையில் தொடரிலிருந்து பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு பிறகு மூன்றாவது அணியாக இங்கிலாந்து வெளியேறியது.
ஜோஸ் பட்லர் தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 351 ரன்கள் குவித்தும் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 326 ரன்களை அடிக்க முடியாமல் 8 ரன்களில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் குரூப் பி பிரிவிலிருந்து முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறியது.
இந்த சூழலில் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் ஜோஸ் பட்லர் கேப்டன் பதிவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கேப்டன் பதவியிலிருந்து விலகிய பட்லர்..
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் அணியை வழிநடத்தும்போது துணைக்கேப்டனாக செயல்பட்ட ஜோஸ் பட்லர், ஜுன் 2022 முதல் ஒயிட் பால் கேப்டனாக பொறுப்பேற்றார். அதன்பிறகு 2022 டி20 உலகக்கோப்பையில் பட்லர் தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, அரையிறுதியில் இந்தியாவையும், இறுதிப்போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தி டி20 கோப்பையை தட்டிச்சென்றது. அதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக ஐசிசி கோப்பை வென்ற மூன்றாவது கேப்டனாக மாறினார் ஜோஸ் பட்லர்.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதான இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-0 என தோற்ற இங்கிலாந்து அணி, 2025 சாம்பியன்ஸ் டிராபியிலும் ஒரு போட்டியில் கூட வெல்லமுடியாமல் தோல்வியை சந்தித்துள்ளது. உண்மையில் கேப்டனாக சில தவறான முடிவுகளை ஜோஸ் பட்லர் எடுத்திருந்தார்.
இந்த சூழலில் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பில், “இந்த முடிவு எனக்கும், அணிக்கும் சரியான முடிவாக இருக்கும் என நம்புகிறேன். வேறு யாராவது வந்து, மெக்கல்லம் உடன் நெருக்கமாகப் பணிபுரிந்து, அணியை முன்னோக்கி அழைத்துச் செல்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டு தோல்விகளுடன் முன்னேற முடியாமல் போனது என கேப்டன்சியின் முடிவு என்றே கருதுகிறேன். இதை அவமானமாக உணர்கிறேன், அதற்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 45 ஒருநாள் போட்டிகள் மற்றும் 51 டி20 போட்டிகள் என மொத்தம் 96 போட்டிகளுக்கு பட்லர் கேப்டனாக செயல்பட்டுள்ளார். நாளை நடைபெறவிருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி போட்டியில் கேப்டனாக செயல்படவுள்ளார்.