ARTICLE AD BOX
கரூர்: தொழிலதிபரிடம் ரூ.15கோடி மோசடி வழக்கில் சென்னை டிட்கோ வருவாய் அலுவலரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னையில் டிட்கோ வருவாய் அலுவலராக பணியாற்றி வருபவர் சூரிய பிரகாஷ். இவர், கடந்த 2016ல் கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தார். கொரோனா காலத்தில் கரூரில் மருத்துவதுறையை சார்ந்தவர்களுக்கு துணிகள் தயாரிக்கும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் நல்லமுத்து அறிமுகம் கிடைத்துள்ளது.
அப்போது சூரிய பிரகாஷ், நல்லமுத்துவிடம் வட மாநிலங்களில் நீங்கள் தயாரிக்கும் துணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அசாம் மாநிலம் குவகாத்தியில் உள்ள 3 நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதன்படி நல்லமுத்துவை அங்கு அழைத்து சென்றும், அந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் என அறிமுகம் செய்து வைத்தும், இதற்காக வங்கி கணக்குகள் மூலம் ரூ.15 கோடி வரை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நல்லமுத்து, பலமுறை பணத்தை கேட்டும் சூர்யபிரகாஷ் கொடுக்க வில்லை.
இதுதொடர்பாக நல்லமுத்து புகாரின்படி கடந்த ஆண்டு கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்ய பிரகாஷ், ஈரோட்டை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், பெங்களூரை சார்ந்த பூபதி செல்வராஜ் மற்றும் வட மாநிலத்தவர்கள் 3 பேர் என 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் சென்னை சென்ற கரூர் குற்றப்பிரிவு போலீசார் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்ய பிரகாஷை கைது செய்து நேற்று கரூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தொழிலதிபரிடம் ரூ.15 கோடி மோசடி; சென்னை டிட்கோ அதிகாரி கைது appeared first on Dinakaran.