ARTICLE AD BOX
தொடர்ந்து சரியும் பங்குச்சந்தைகள் – சில்லறை முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
சென்னை: கடந்த சில மாதங்களாகவே இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவு பாதையிலேயே இருக்கின்றன. இதனால் பல்வேறு முதலீட்டாளர்களும் பங்குச்சந்தை முதலீடுகளில் இருந்து வெளியேறிவிடலாமா என்ற மன குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் வரலாற்றில் இல்லாத உச்சத்தை எட்டின. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகள் சரிவு பாதையிலேயே இருக்கின்றன. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 26,277 புள்ளிகளில் இருந்து 22,124 புள்ளிகள் என சரிவடைந்துள்ளது. அதாவது தன்னுடைய வரலாறு காணாத உச்சத்திலிருந்து 4,000க்கும் அதிகமான புள்ளிகள் என 16 சதவீதம் வரை இறங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தன்னுடைய வரலாறு காணாத உச்சமான 85,978 புள்ளிகளில் இருந்து சுமார் 12,000 புள்ளிகள் குறைந்து 73,198 புள்ளிகள் என 15 சதவீதம் சரிவில் இருக்கிறது. வங்கி சார்ந்த நிறுவனங்களுக்கான குறியீட்டு எண் பேங்க் நிஃப்டி 54,467 புள்ளிகளில் இருந்து 11% சரிவடைந்து 48,344 புள்ளிகளாக இருக்கிறது. அதேபோல மிட்கேப் இன்டெக்ஸ் 22% , ஸ்மால் கேப் இன்டெக்ஸ் 25% இருக்கிறது.
இந்திய பங்குச்சந்தையில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் முதலீட்டாளர்கள் 94 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். பெருமளவில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குகளை விற்பனை செய்வதே பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்திய பங்குச்சந்தை அதிகபட்ச மதிப்பீட்டில் இருந்ததும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது சீன பங்குச்சந்தையை நோக்கி படையெடுப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இந்தியாவில் விதிக்கப்படும் மூலதன ஆதாய வரியும் முதலீட்டாளர்கள் வெளியேற ஒரு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த பங்குச்சந்தை சரிவில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சில்லறை முதலீட்டாளர்கள்தான். சில்லறை முதலீட்டாளர்கள் பலரும் பங்குச்சந்தையை விட்டு வெளியேறிவிடலாமா என சிந்திக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக லக்ஷ்மி ஸ்ரீ இன்வெஸ்ட்மென்ட் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அன்சுல் ஜெயின் அளித்துள்ள பேட்டியில், பங்குச் சந்தை சரிவை முதலீட்டாளர்கள் முதலீட்டுக்கான வாய்ப்பாக மட்டுமே பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.பங்குச்சந்தை சரிவில் இருக்கும் போது இன்ட்ரா டே வர்த்தகம் உள்ளிட்டவற்றை கைவிட்டு சரியான பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்குகிறார்.
ஸ்டாக் பாக்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் அக்ரிதி சில்லறை முதலீட்டாளர்கள் அதாவது நீண்ட காலத்திற்கு முதலீடு திட்டத்தை வைத்திருப்பவர்கள் இதனை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும் என கூறுகிறார். பங்குச்சந்தையில் இதற்கு முன்பு 10000 ரூபாய் கொடுத்து வாங்கிய பங்கின் விலையை தற்போது வெறும் 5000 ரூபாய்க்கு கிடைக்கிறது எனும்போது அதனை வாங்கி வைக்க வேண்டும் என கூறுகிறார். ஆனால் இவ்வாறு பங்குகளை வாங்குவதற்கு முன்பாக நீங்கள் வாங்கக்கூடிய நிறுவனத்தின் அடிப்படைகள் எப்படி இருக்கிறது ,அந்த நிறுவனத்தின் வருவாய் எப்படி இருக்கிறது, கடன் நிலை உள்ளிட்ட முக்கிய அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
Story written by: Devika
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.