தொகுதி மறுவரையறை: மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

18 hours ago
ARTICLE AD BOX

தொகுதி மறுவரையறை: மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

தொகுதி மறுவரையறை, சென்னையில் ஸ்டாலின் தலைமையில் கூட்டம்

பட மூலாதாரம், ANI

3 நிமிடங்களுக்கு முன்னர்

நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமையன்று (மார்ச் 22) சென்னையில் நடைபெற்றது.

'மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு 8 நாடாளுமன்றத் தொகுதிகள் வரை குறையும்; மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும்' எனக் கூறுகிறார் ஸ்டாலின்.

தி.மு.க நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தைக் கற்பனை கலந்த நாடகம் என பா.ஜ.க விமர்சித்துள்ளது.

கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? மாநில முதலமைச்சர்கள் பேசியது என்ன?

சென்னையில் முதல் கூட்டம்

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (மார்ச் 22) நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு தலைவர்களின் மேஜையின் மீதும் அவர்களின் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

தொகுதி மறுவரையறை, சென்னையில் ஸ்டாலின் தலைமையில் கூட்டம்

பட மூலாதாரம், HANDOUT

ஸ்டாலின் என்ன பேசினார்?

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு மொழிகள், இனங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடு, உடைகள், உணவுகள் என பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ளன. இத்தகைய மாநிலங்கள் சுயாட்சியுடன் செயல்பட்டால் தான் உண்மையான கூட்டாட்சி உருவாக முடியும்" எனக் கூறினார்.

தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்பு குறித்துப் பேசிய ஸ்டாலின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது நம்மைப் போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கும் என்று குறிப்பிட்டார்.

"பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள், மக்களவைத் தொகுதி எண்ணிக்கையில் பிரநிதித்துவத்தை இழக்க நேரிடும். எனவே இதனை கடுமையாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்" எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

"மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது" எனக் கூறிய ஸ்டாலின், இது வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டும் அல்ல, அதிகாரம் மற்றும் எதிர்கால நலன்களை உள்ளடக்கியதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க அனுமதித்தால் சொந்த நாட்டில் அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் ஏற்படும். எனவே தான் இந்த விவகாரத்தை சாதாரணமாக கடந்து போகக் கூடாது என தான் கூறுவதாகவும்" ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாடு எட்டு இடங்களை இழக்கும் எனக் கூறிய ஸ்டாலின், "மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்தக் கூட்டம் அவசியம். அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைளை மேற்கொள்ளும் ஒரு குழுவை முன்மொழிகிறேன்" எனக் கூறினார்.

தொகுதி மறுவரையறை, சென்னையில் ஸ்டாலின் தலைமையில் கூட்டம்

பட மூலாதாரம், ANI

பினராயி விஜயன் பேசியது என்ன?

"தொகுதி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் கேரளா மற்றும் தென்மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்படும்" என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

பன்முகத்தன்மையே இந்தியாவின் பலமாக உள்ளதாகக் கூறிய பினராயி விஜயன், "எண்ணிக்கை மட்டுமல்ல, இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம். மாநில அரசுகளுடன் அவசியமான உரையாடலை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், " மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதில் தென்மாநிலங்கள் முக்கிய பங்கு வகித்தன. நாட்டின் நலனுக்காக இவை செயல்படுத்தப்பட்டன. இதற்கான தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு உள்ளது" எனக் குறிப்பிட்டார்.

தொகுதி மறுவரையறை, சென்னையில் ஸ்டாலின் தலைமையில் கூட்டம்

பட மூலாதாரம், ANI

தெலங்கானா, பஞ்சாப் முதல்வர்கள் பேச்சு

கேரள முதல்வரின் கருத்தை தனது பேச்சில் குறிப்பிட்ட தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "பா.ஜ.க நம்மைப் பேசவே விடுவதில்லை. அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். கட்சி வேறுபாடுகளைக் கடந்து போராட வேண்டும். டெல்லியில் இதற்கான பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்க வேண்டும்" எனக் கூறினார்.

"தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலம் மட்டுமல்லாமல் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் தொகுதி மறுசீரமைப்பால் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும்" என பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் குறிப்பிட்டார்.

தொகுதி மறுவரையறை, சென்னையில் ஸ்டாலின் தலைமையில் கூட்டம்

பட மூலாதாரம், ANI

நவீன் பட்நாயக் பேசியது என்ன?

ஒடிஷா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், காணொலி காட்சி மூலமாக தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசும் போது, "மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியமான கூட்டமாக இது உள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அநீதி ஏற்படுத்துவதாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது" எனக் கூறினார். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யக் கூடாது எனவும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.

தீர்மானங்கள் என்ன?

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  • தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும். இதை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதி அறிவிக்க வேண்டும்.
  • வெளிப்படையான முறையில் தொகுதி மறுசீரமைப்பை செயல்படுதத் வேண்டும்.
  • 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலேயே மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

தெலங்கானா முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

தொகுதி மறுவரையறை, சென்னையில் ஸ்டாலின் தலைமையில் கூட்டம்

பட மூலாதாரம், HANDOUT

பரிசுப் பெட்டியில் என்ன உள்ளது?

கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தமிழக மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரித்த பரிசுப் பெட்டிகளை பரிசாக அளித்தார்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய பொருட்களான பத்தமடை பாய், கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், ஊட்டி வர்க்கி, தோடர் சால்வை, காஞ்சிப் பட்டு, கொடைக்கானல் பூண்டு, குமரி கிராம்பு உள்பட 8 வகையான பொருட்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

பாஜக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் கருப்புக் கொடி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டின் முன்பு அண்ணாமலை கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கேரள முதல்வர், தெலங்கானா முதலமைச்சர், கர்நாடக துணை முதல்வர் என ஆகியோரை அழைதது இவர்களின் கற்பனைக்காக, ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்" என விமர்சித்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Xவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு அரசியல் லாபம் அடைய வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். தொகுதி சீரமைப்பால் தமிழ்நாட்டில் எந்தவொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் பாதிப்பு வரப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

3 கட்சிகள் பங்கேற்கவில்லை

ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளையும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தும், அக்கட்சிகள் அதில் பங்கேற்கவில்லை.

நியாயமான தொகுதி மறுவரையறையை உறுதி செய்ய வலியுறுத்தி பிரதமர் மோதிக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். "நாட்டின் சமூக மற்றும் அரசியல் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திறன் கொண்ட பிரச்சினை என்பதால், இதன் தீவிரத்தை கருத்தில் கொண்டு வழிகாட்ட வேண்டும், உங்களின் ஒரு உத்தரவாதம் பல மாநிலங்களின் அச்சங்களைப் போக்க பெரிதும் உதவும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸோ, தொகுதி மறுவரையறைக் காட்டிலும் ஒரே எண் கொண்ட வாக்காளர் அடையாள அட்டை பலருக்கும் வழங்கப்பட்டதையே உடனடி பிரச்னையாக கருதுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Read Entire Article