ARTICLE AD BOX
புதுச்சேரியை அடுத்த ஆரோவில்லில் தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டியில் தமிழ்நாட்டு வீரர்கள் அதிக அளவிலான பதக்கங்களை தட்டி சென்றனர். கோவை, மேல்மருவத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த குதிரையேற்ற வீரர்கள் அதிக பதக்கங்களை தட்டி சென்றனர்.
ஆரோவில்லில் குதிரையேற்ற பயிற்சி பள்ளி சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன் 25ம் ஆண்டு போட்டி கடந்த 7ம் தேதி தொடங்கியது. இதில், சென்னை, மும்பை, பெங்களூரு, உதகமண்டலம் உட்பட பல்வேறு நகரங்களிலிருந்து 100 குதிரைகள் மற்றும் 150க்கு மேற்பட்ட குதிரையேற்ற வீரர்களும் கலந்துகொண்டனர்.
தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும் மாலை 3 மணி முதல் 6மணி வரையும் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. தடைதாண்டுதல், நடைப்பயிற்சி, குதிரை மற்றும் வீரர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் குதிரையேற்ற வீரர்கள் தங்கள் அபார திறனை வெளிப்படுத்தி அசத்தினர்.
இறுதியில் ஸ்பைடெர்மன், கௌபாய், பேட் மேன் உள்ளிட்ட பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்களில் இளம் வீரர்கள் குதிரையில் வந்து அலங்கார நடை நிகழ்வில் பங்கேற்று பார்வையாளர்களை உற்சாக படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோவை மேல்மருவத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த குதிரையேற்ற வீரர்கள் அதிக பதக்கங்களை தட்டி சென்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.