தெலங்கானா சுரங்க விபத்து: மோப்ப நாய் உதவியை நாடும் மீட்புக் குழு!

4 hours ago
ARTICLE AD BOX

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்க மோப்ப நாய்களைப் பயன்படுத்த மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.

தெலங்கானாவின் நாகா்குர்னூல் மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணியில் 5-வது நாளாக மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம், கடற்படை, எலிவளை சுரங்க தொழிலாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

5வது நாளான இன்று (பிப். 26) தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், எலிவளை சுரங்க தொழிலாளர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவினர், சுரங்கத்தில் இறுதிவரை சென்று திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கத்தின் கடைசி 50 மீட்டர் முழுவதும் சேறும் இடிபாடுகளும் இருக்கும் நிலையில், இடிபாடிகளில் சிக்கியுள்ள யாரையும் கண்டறிய முடியவில்லை என மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமையும் சுரங்கத்தில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர், ஆனால், எவ்வித முன்னேற்றமும் அடையாததால் இரவு வெளியேறினர்.

இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க மோப்ப நாய்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, விபத்து நடந்துள்ள இடத்தில் இருந்து 40 மீட்டர் தூரத்துக்கு சகதி உள்ளிட்ட பல்வேறு தடைகள் உள்ளன. அவை தற்போது திடமாக்கப்பட்டு வருகிறது. அதனால் விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழுவினர் எளிதில் முன்னேறிச் செல்ல முடியும். இதில் மோப்ப நாய்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மோப்ப நாய்களின் உதவியுடன் சிக்கியிருப்பவர்களைக் கண்டறிய இயலும். தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் மண்ணை திடப்படுத்துவது குறித்த தங்கள் கருத்துகளை விரைவில் வழங்கவுள்ளது. அதன் அடிப்படையில் மீட்புக் குழுவினர் தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் விபத்து நடந்த சுரங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள, ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் சுரங்கத்தில் உள்ள சகதியும் இறுகத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | பழக் கழிவுகளால் கான்கிரீட் வலிமையை அதிகரிக்கலாம்: புதிய யோசனை சொல்லும் இந்தூர் ஐஐடி!

Read Entire Article