ARTICLE AD BOX
தில்லி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் விஜயேந்தர் குப்தா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
தில்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக இன்றும்ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் போராட்டம் நடத்தினார்கள்.
எச்சரிக்கையை மீறியும் போராட்டம் தொடர்ந்ததால், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி, முன்னாள் அமைச்சர் கோபால் ராய் உள்பட 11 எம்எல்ஏக்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த தலைமை கணக்கு தணிக்கையாளர்(சிஏஜி) அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கை மீது பாஜக உறுப்பினர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர். முந்தைய ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
பாஜக விளக்கம்
தில்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் படங்களை அகற்றியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அவை சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து பாஜகவினர் நேற்று விளக்கமளித்திருந்தனர்.
முந்தைய ஆட்சியில் முதல்வர் இருக்கைக்கு பின்புறம் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் தற்போது முதல்வர் இருக்கைக்கு வலப்புறச் சுவற்றில் மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.