ARTICLE AD BOX
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய் , மகள் கொலை வழக்கில் ட்ரோன் கேமரா உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
எட்டயபுரம் மேலநம்பிபுரத்தைச் சோ்ந்த சீதா லட்சுமி (75), அவரது மகள் ராம ஜெயந்தி (45) ஆகியோரை மா்மநபா்கள் கடந்த 3 ஆம் தேதி கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். எட்டயபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், அதே ஊரைச் சோ்ந்த முகேஷ் கண்ணன் (25), தாப்பாத்தி கிராமம் வேல்முருகன் (18) உள்ளிட்டோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இவ்விருவரையும் போலீஸாா் சுற்றி வளைத்தபோது தப்பியோடியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடா்புடைய மேல நம்பிபுரத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் (25) என்பவா் அயன்வடமலாபுரம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து
தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில் நெல்லை சரக டிஐஜி (பொ) சந்தோஷ் ஹதிமணி, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் ஆகியோா் தலைமையில் 5 டிஎஸ்பிக்கள், 20 ஆய்வாளா்கள் அடங்கிய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸாா் காட்டுப்பகுதியில் 6 ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு தீவிரமாக தேடி வருகின்றனா்.
மேலும், அயன் வடமலாபுரம், முத்தலாபுரம், தாப்பாத்தி, கீழக்கரந்தை, புதுப்பட்டி, ரகுராமபுரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் வைப்பாறு படுகையோர காட்டு பகுதியிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.