தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?

2 days ago
ARTICLE AD BOX
kaliyammal tvk

சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த பிறகும், தந்தை பெரியார் குறித்து கடும் விமர்சனங்களை சீமான் முன்வைக்க தொடங்கியதை அடுத்தும் இந்த விலகல்கள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.

இந்த விலகல் லிஸ்டில் சில மாதங்களுக்கு முன்னரே அடிபட்ட பெயர்களில் நாம் தமிழர் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பெயரும் அடக்கம்.  அதற்கு முன்னர் தான் சீமான், காளியம்மாளை ஒரு தொலைபேசி உரையாடலில் திட்டியதாக ஒரு (ஆதாரமற்ற) செய்தியும் உலா வந்தது. மேலும், விஜயின் தவெக-வில் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் இணைய உள்ளதாக செய்திகள் வந்த போது அதில் காளியம்மாள் பெயரும் அடிபட்டது.

ஆனால், அப்போது காளியம்மாள் தரப்பு மறுப்பு தெரிவித்தது. அதேபோல, ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மட்டுமே தவெகவில் அப்போது இணைந்தனர். அந்த சமயத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார் காளியம்மாள். அண்மையில் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்ட காளியம்மாளின் பெயரானது சமூக செயற்பாட்டாளர் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது தான் இந்த உட்கட்சி பூசல் விவகாரம் பொதுவெளியில் அதிகமாக பேசப்பட்டது.

அதன் பிறகு தான் தற்போது காளியம்மாள், தான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன் என அதிகாரபூர்வமாக அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், ” கடந்த வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு பயணித்ததில் பலரின் அன்பு அக்கறை, நம்பிக்கை என்மீதான அளவற்ற பாசம் என்ற அனைத்தையும் மனதில் நிலைநிறுத்தியுள்ளேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

இதில் இறுதியில் அவர் கூறிய வாசகம் தான் சற்று உற்றுநோக்க வைத்துள்ளது. ” என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்.” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தமிழ் தேசியமும், திராவிடமும் தான் தனது இரு கண்கள் என தனது கொள்கைகளை விளக்கியவர் தவெக தலைவர் விஜய். இப்படியான சூழலில், தமிழ் தேசியத்தை விதைக்கும் கட்சியில் எனது பயணம் என காளியம்மாள் கூறியிருப்பது. முன்பு உலாவிய வதந்திகளை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றே கூற வேண்டும்.

எதுவாக இருந்தாலும், மேற்கண்ட தகவல் சற்று யூகம் மட்டுமே. அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் பட்சத்தில் காளியம்மாள் கூறிய தமிழ்த்தேசிய அரசியல் பயணம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த அத்தனை உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, வருத்தங்களையும் பகிர்ந்துக்கொள்கிறேன்!🙏 pic.twitter.com/s3XDalu7lo

— காளியம்மாள் பிரகாசன் (@Kaliyammal_off) February 24, 2025

Read Entire Article