ARTICLE AD BOX
தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு?
விழாவில் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் பேசியதாவது, "பல இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். நிறைய பத்திரிகையாளர் சந்திப்புகளை கடந்து வந்திருக்கிறேன். அங்கிருந்து பார்த்து கைத்தட்டி இருக்கிறேன். அந்த வகையில், இங்கிருந்து பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முதலில் அனைவருக்கும் வணக்கம். ஊடகம் இன்றி இங்கு எதுவும் இல்லை. அரசியல், நடிகர், இயக்குநர் என யாராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு முதலில் வெளிக்கொண்டு வரும். அந்த வகையில், முதலில் உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. மர்மர் தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம். இதை பற்றி கொஞ்சம் விளக்கிக் கூறுகிறேன். உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறினால், அதுபற்றிய விசாரணைக்கு முதலில் அங்கிருக்கும் சி.சி.டி.வி. வீடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும். அதை படமாக காண்பிக்கும் போது, அந்த ஆவணத்தை தான் நாங்கள் படமாக காண்பிக்கிறோம். அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களை பதிவிடும் ஏழு யூடியூபர்கள் ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித்திரிவதை நேரடியாக பதிவு செய்ய செல்கிறார்கள்.
அவர்களுக்கு என்ன ஆனது, அவர்கள் செல்லும் வழியில் காணால் போகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களை பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் படத்தின் கதையாக வைத்திருக்கிறோம். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. குகன் சார், பிரபாகரன் சார் நன்றி. நோயாளியாக வந்தீர்கள், தற்போது தயாரிப்பாளராக மாறியிருக்கிறீர்கள்."
"படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை அதிகம் சிரமப்படுத்தியிருக்கிறேன். முதலில் ஒளிப்பதிவாளரிடம் இருந்து ஆரம்பிக்கிறேன். 12 நிமிடங்கள் ஒரே ஷாட் காட்சி. அதை படமாக்கும் போது பயிற்சி செய்தோம். எல்லா படங்களிலும் காட்சியை படமாக்கும் முன் நடிகர்கள் பயிற்சி எடுப்பார்கள். ஆனால், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளரும் பயிற்சி எடுத்துக் கொண்டார். டிரெய்லரில் நடிகர்கள் கேமராவை அவர்களாகவே பிடித்து இயக்கிய படி பார்த்திருப்பீர்கள். உண்மையில், அவற்றை படம்பிடித்தது ஒளிப்பதிவாளர் தான். அவர்களின் கை அசைவுகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் கேமராவை இயக்க வேண்டும். இந்த ஒரே ஷாட் காட்சி எடுப்பதற்காக ஒருநாள் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்தினோம். அதற்கு ஒளிப்பதிவாளர் குழுவை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். நான் பிசியோதெரபி கல்லூரி படிக்கும் போது நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அப்போது குறும்பட போட்டியில் மட்டும் மருத்துவத் துறையை சார்ந்து யாரும் கலந்து கொள்ளாமல் இருந்தனர். ஆனால், நான் அப்படி இருக்க கூடாது என நினைத்து, கேமராவை வாடகைக்கு எடுத்து குறும்படம் எடுக்க தொடங்கினேன். கல்லூரி முடிந்தும் இரண்டு ஆண்டுகள் வரை குறும்படம் இயக்கியும், கதைகளை எழுதிக் கொண்டு இருந்தேன். நான் எடுத்த குறும்படங்களில் எனக்கு பிடிக்காதவற்றை நானே ஓரம்கட்டி விடுவேன். சில கதைகளை படமாக்க தயாரிப்பாளர்களை தேடி வந்தேன். மருத்துவராக கிடைக்கும் மரியாதை, இயக்குநருக்கு கிடைக்காது என்பதை புரிந்து கொண்டேன்.
அதன்பிறகு மேல்படிப்பு படித்தேன். மேல்படிப்பு முடித்ததும், எந்த மருத்துவமனையில் பணியாற்ற போகிறாய் என வீட்டில் கேட்டார்கள். நான் படமெடுக்க போகிறேன் என்று கூறினேன். அந்தப் படத்தின் டிரெய்லரை தான் தற்போது நீங்கள் பார்த்தீர்கள். குறும்படம் போன்றே, இந்தப் படத்தைய எடுக்கும் போதும் பிடிக்கவில்லை என்றால் ஓரம்கட்டிவிடலாம் என்றே நினைத்திருந்தேன். முதலில் வரும் போது சிறப்பாக வரவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகவும் கடின உழைப்பை கொடுத்தார்கள். பலர் இங்கு வாங்கிய சம்பளத்தில் பெரும் பகுதியை மருத்துவத்திற்கே செலவு செய்திருப்பார்கள். நிறைய காட்சிகள் அங்கிருந்த இயற்கை வெளிச்சம் கொண்டே படமாக்கினோம். சில காட்சிகளில் தீ மூட்டி அதில் இருந்து கிடைத்த வெளிச்சம் கொண்டு படமாக்கினோம். அப்போது காட்சிக்கு பின்னணியில் இருப்பவர்கள் காட்சிக்கு ஏற்ப ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சூழலில் எத்தனை முறை கேட்டாலும், ஒளிப்பதிவாளர் சிரமம் பார்க்காமல் படமாக்கி கொடுத்தார். மிக்க நன்றி ஜேசன்.
புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும். கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில், பிரத்யேக ஸ்டைல் மற்றும் நுணுக்கங்களை கொண்டு இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். இந்தப் படம் வருகிற மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22