ARTICLE AD BOX

வாணியம்பாடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எ.வ. வேலு, மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய மானியத்தை குறைத்து மாநில ஆட்சியாளர்களின் பெயரை கெடுக்க நினைக்கின்றது. கீழடி தமிழர்களின் தொன்மையான வரலாற்றை எடுத்துக் கூறுகின்றது. 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்புக்காலம் இருந்தது, அதுவும் தமிழருடைய காலம் என்பதை உலகிற்கு அறிவித்தவர் முதலமைச்சர். அவர்தான் உண்மையான இரும்பு மனிதர். அவர் தாய்மொழிக்காக எவருக்கும் மண்டியிட மாட்டேன் என கூறுகிறார். ஆனால் பலர் மத்திய அரசுக்கு பயந்து மண்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்திற்கான நிதியை தராமல் தன்மானத்தின் மீது கை வைக்கிறார்கள். நம் பண்பாட்டின் அடையாளம் தான் மொழி.
500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த மொழி இந்தி. ஆனால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்த மொழி தான் தமிழ். பிரதமர் மோடி தமிழ் பிடிக்கும் என்று கூறிவிட்டு ஐநாவில் தமிழ் படிக்கின்றார். திமுக தேசிய கல்விக் கொள்கையுடன் ஒத்துப்போக தயாராக இல்லை. தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனைத்து நிதியையும் தருவது தமிழக அரசுதான். ஆனால் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தமிழே தெரியாதவர்களை நியமிக்க ஆளுநர் முயற்சி செய்கிறார். மும்மொழி கொள்கையால் தமிழரின் அடையாளம் அழிந்து விடும். தமிழை போற்றுவோம். முதல்வருடன் துணையாக இருந்து இந்தி திணிப்பை எதிர்ப்போம், இந்தி பேயை ஓட்டுவோம் என எ.வ வேலு தெரிவித்துள்ளார்.