ARTICLE AD BOX
தமிழகத்தில் தற்போது 2,735 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகளின் அளவு விரைவில் 3,698 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு அதிகரிக்கப்போவதாகவும், அதுபோல சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிக்கும் என்றம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72ல் இருந்து 90 ஆக உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
அதாவது, தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் 963 கி.மீ. நீளமுள்ள 4 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவு பெறும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது, 767 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி நிறைவு செய்யும் நிலையில் இருப்பதாகவும், அடுத்த ஆண்டுக்குள் இவை திறக்கப்பட்டுவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 18 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 90 ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தமிழகத்தில் உள்ள 72 சுங்கச் சாவடிகள் மூலம், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ரூ.26,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆறு நான்கு-வழிச் சாலைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்னும் ஓராண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், விக்ரவாண்டி - தஞ்சை, மாமல்லபுரம் - புதுச்சேரி கிழக்கு, நாகை - தஞ்சை, திண்டுக்கல் - பொள்ளாச்சி, விழுப்புரம் - நாகை, குடிபலா - ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஆறு நான்கு-வழிச் சாலைகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.