இந்தியாவில் முதல்முறை.. புற்றுநோய் மரபணு தரவுத் தளம் சென்னை ஐஐடி-யில் அறிமுகம்!

2 hours ago
ARTICLE AD BOX

உலகளவில் மிக ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்று புற்றுநோய். இந்த கொடிய நோயுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (Indian Medical Research Council) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி 14,61,427 பேர் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாகவும் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டம் தெரிவித்துள்ளது. 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்து வருகிறது. 

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் உள்ள போதும், உலகளாவிய மரபணு ஆய்வுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாக இருப்பதாகவே மதிப்பிடப்படுகிறது. இந்தியாவில் பரவலாக உள்ள புற்றுநோய்களுக்கென மரபணுக் கட்டமைப்பு இல்லாத காரணத்தால், இந்தியாவில் புற்றுநோயின் குறிப்பிட்ட திரிபுகளைக் கண்டறியக்கூடிய நோய் கண்டறியும் சாதனங்களோ, மருத்து வகைகளோ பட்டியலிடப்படவில்லை. 

மேலும் படிங்க: எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விஜய் இணைந்து முடிவு செய்ய வேண்டும் - டி.டி.வி தினகரன்!

இந்தியாவில் பல்வேறு புற்றுநோய்களுக்கு மரபணு ரீதியாக இருந்துவரும் இடைவெளியை நிரப்பும் வகையில், புற்றுநோய் மரபணுத் திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டில் ஐஐடி மெட்ராஸ் தொடங்கியது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 480 மார்பகப் புற்றுநோய் நோயாளிகளின் திசு மாதிரிகளில் இருந்து 960 முழு எக்சோம் வரிசைமுறை சேகரிக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது. 

மும்பையில் உள்ள கார்கினோஸ் ஹெல்த்கேர், சென்னை புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து ஐஐடி மெட்ராஸ் இந்திய மார்பகப் புற்றுநோய் மாதிரிகளில் இருந்து மரபணு திரிபுகளின் பெயர் குறிப்பிடப்படாத சுருக்கத்தை சேகரித்தது. உலக புற்றுநோய் தினம் நாளை (பிப்ரவரி 4, 2025) கடைபிடிக்கப்படும் நிலையில் இந்தப் பணி முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

இந்திய மார்பகப் புற்றுநோய் மரபணு வரிசை உருவாக்கம் நிறைவடைந்ததாக அறிவித்தத ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ‘பாரத் புற்றுநோய் மரபணு வரைபடத்தை (Bharat Cancer Genome Atlas – BCGA) இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று (பிப்ரவரி 03) வெளியிட்டார்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் வெளிப்படையாக அணுகக்கூடிய வகையில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில், bcga.iitm.ac.in என்ற தரவுத்தளத்தை இக்கல்வி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. 

'பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம்' இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், "அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற சமூகத்திற்கான உறுதிப்பாட்டில் உண்மையாக உள்ள நாங்கள், மூளைத் தரவுகளைத் தொடர்ந்து இக்கல்வியாண்டில் இரண்டாவதாக புற்றுநோய் மரபணு தரவுகளை வெளியிடுகிறோம். 

இதன் மூலம் இக்கொடிய நோய்க்கு வழிவகுக்கும் காரணங்கள் பற்றிய ஆழமான நுண்ணறிவு பெறப்படும் என்றும், ஆரம்பகட்டத்திலேயே தடுத்து நிறுத்த உதவும் என்றும் நம்புகிறோம். நாட்டில் உள்ள வெவ்வேறு புற்றுநோய்களுக்கான மரபணு வரைபடத்தில் உள்ள பிரச்சனைகளை அட்லஸ் நிரப்புகிறது. இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அதன் திரிபுகளை வகைப்படுத்த இது உதவும். 

இதனால்  ஆரம்பகட்டத்திலேயே 

  • நோயைக் கண்டறிதல் 
  • நோய் முன்னேற்றம் 
  • சிகிச்சை விளைவுகளால் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளை அறிந்துகொள்ள முடியும்" எனக் குறிப்பிட்டார். 

மேலும் படிங்க: தமிழகத்தில் நாளை இந்த இடங்களில் 5 மணி நேரம் மின்சாரம் இருக்காது!

Read Entire Article