ARTICLE AD BOX
தமிழ்நாடு முழுவதும் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.முதலமைச்சர் மருந்தகம் திறப்பு
20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகளை வழங்கும் முதலமைச்சர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
2.மீனவர்கள் வேலை நிறுத்தம்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளனர். 700க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்து உள்ளனர்.
3.இந்திய அணிக்கு முதலமைச்சர் வாழ்த்து
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இதே வேகத்தோடு செயல்படுங்கள், சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து பதிவு.
4.முதல்வர் மீது அன்புமணி விமர்சனம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரமில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது கோழைத்தனம் என கும்பகோணம் அருகே நடந்த சோழ மண்டல சமய - சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி விமர்சனம்.
5.அன்புமணிக்கு சேகர்பாபு பதில்
வழக்கிற்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்; மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி சவால் விடுபவர் முதலமைச்சர் ஸ்டாலின். கோழை எனக் கூறுபவர்கள் அந்த சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்கள்; மாநில உரிமைக்காக குரல் கொடுக்கும் எங்கள் முதல்வர் இரும்பு முதல்வர் என பாமக தலைவர் அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்.
6.திமுக மீது பாஜக விமர்சனம்
தமிழ்நாட்டு மக்கள் இந்தி கற்றுக் கொண்டால், பிரதமர் மோடி பேசுவது மக்களுக்கு நேரடியாக புரிந்துவிடும் என்பதால் திமுக எதிர்க்கிறது என மணப்பாறையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் பேச்சு.
7.புதுச்சேரியில் சாலை விபத்து
புதுச்சேரியிலிருந்து விஜயவாடா சென்ற தனியார் சொகுசு பேருந்து, சூலூர்பேட்டை அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. விபத்து குறித்து போலீசார் விசாரணை .
8.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 329 கன அடியாக சரிவு. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 109.88 அடியாகவும், நீர் இருப்பு 78.239 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றம்.
9.தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூபாய் 80 உயர்ந்து ரூ.64,440-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் 8,055 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
10.முதலையை மீட்ட வனத்துறை
சிதம்பரம், அம்மாப்பேட்டை அருகே சம்பந்தமூர்த்தி என்பவர் வீட்டுத் தோட்டத்தில் புகுந்த 13 அடி நீளமும், 550 கிலோ எடையும் கொண்ட முதலையை மீட்டு வக்காரமாரி ஏரியில் வனத்துறையினர் விட்டனர்.
