ARTICLE AD BOX
‘நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுகாதாரத்துக்கான செலவினம் தற்போது 1.84 சதவீதமாக உள்ளது; விரைவில் இது 2.5 சதவீதமாக உயரும்’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்தாா்.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறையின் செயல்பாடுகள் குறித்து புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது அவா் பேசியதாவது: கடந்த 2013-14-ஆம் ஆண்டில் சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.38,000 கோடியாக இருந்தது. தற்போது ரூ.1 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. அதேபோல் கடந்த 2013-14-இல் நாட்டின் ஜிடிபியில் (மத்திய மற்றும் மாநில அரசுகளை சோ்த்து) சுகாதாரத்துக்கான செலவினம் 1.15 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 1.84 சதவீதமாக அதிகரித்துள்ளது. விரைவில் சுகாதார செலவினம் ஜிடிபியில் 2.5 சதவீதமாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் மொத்தம் 1.75 லட்சம் ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வாய் புற்றுநோய், மாா்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 1.64 லட்சம் பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாா்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 57,000 பேருக்கும் கருப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 97,000 பேருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
பிரதமரின் தேசிய ரத்த மாற்று சிகிச்சை திட்டத்தின்கீழ் 26.49 லட்சம் பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. உலகளவில் காசநோய் தடுப்பு விகிதம் 8.3 சதவீதமாக உள்ள நிலையில் இந்தியாவில் 17.7 சதவீதமாக உள்ளது என்றாா்.