சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாமல் 9 மாதங்களாக அங்கேயே தங்கி இருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மர் ஆகியோர் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். உலகமே மிகவும் எதிர்பார்த்த ஒரு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்ஸ்யூல் மூலம் மெக்சிகோ வளைகுடாவில் பாராசூட் மூலம் இந்திய நேரப்படி புதன்கிழமை காலையில் இவர்கள் தரை இறங்கினர். ஏழு நாட்கள் பயணத்திட்டமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் , வில்மரும் பயணம் செய்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அவர்கள் 286 நாட்கள் விண்வெளியிலேயே தங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது .

இதனால் அவர்களின் உடல் நிலையிலும் சில பாதிப்புகள் ஏற்பட்டன .எப்படியாவது அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் எப்படியாவது பூமிக்கு திரும்ப விட வேண்டும் என்றும் பலரும் பிரார்த்தனை செய்தனர். தற்போது அவர்கள் பாதுகாப்பாக பூமிக்கும் திரும்பி விட்டனர். இதனை பலரும் மகிழ்ச்சியுடன் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.
மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மிகப்பெரிய நிம்மதி எனக் கூறியுள்ளார். மேலும் சுனிதா வில்லியம்ஸ் உடன் இதற்கு முன்பு தான் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தையும் ஆனந்த் மகேந்திரா எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸையும் வில்மரையும் பார்ப்பது மிகப்பெரிய நிம்மதி ,சில மணி நேரங்களுக்கு முன்பு பூமிக்கு அவர்கள் வெற்றிகரமாக திரும்பி உள்ளனர் . சுனிதா வில்லியம்ஸ் துணிச்சலால் உருவானவர் அவர் மீண்டும் நம்மிடையே இருப்பது நல்லது வரவேற்கிறோம் சுனிதா என தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.
அத்துடன் அவர் இணைத்துள்ள புகைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாம். 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த நிகழ்வுக்காக அமெரிக்கா சென்று இருந்த போது இரவு விருந்தினை முடித்த பிறகு ஆனந்த் மகேந்திரா, முகேஷ் அம்பானி மற்றும் விருந்தா கபூர் ஆகியோர் காருக்காக காத்திருந்ததாகவும் அப்போது சுனிதா வில்லியம்ஸை கண்டதும் அவருடன் சென்று அனைவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த பதிவு எக்ஸ் பக்கத்தில் பலரது வரவேற்பையும் பெற்று இருக்கிறது.