ARTICLE AD BOX
மயிலாடுதுறை: சீர்காழி அருகே மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை செய்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 3 அரை வயது பெண் குழந்தை நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் சாக்லேட் வாங்கி கொடுத்து அழைத்து சென்றுள்ளான்.
அங்கன்வாடிக்கு அருகே உள்ள புதர் பகுதிக்கு குழந்தையை அழைத்து சென்று தவறாக நடக்க முற்பட்டபோது குழந்தை சத்தமிட்டதால் அங்கிருந்த கல்லை எடுத்து குழந்தையை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்து ஒரு பகுதி கண் சிதைந்து குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி சென்றான்.
அங்கன்வாடிக்கு சென்ற குழந்தை வெகு நேரமாக வீடு திரும்பாததால் உறவினர்களும், அப்பகுதியை சேர்ந்தவர்களும் குழந்தையை தேடி உள்ளனர். வெகு நேரமாக தேடி கிடைக்காத குழந்தை ஆபத்தான நிலையில் ஒரு புதரில் ரத்தக்காயங்களுடன் மயங்கி கிடப்பதை கண்டு உறவினர்கள் குழந்தையை மீட்டு உடனடியாக சீர்காழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதை அடுத்து, மேல் சிகிச்சைக்காக குழந்தை பாண்டிசேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் குழந்தையை அழைத்து சென்ற உறவினரின் மகனான 16வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். தற்போது அந்த சிறுவனை நீதிபதி முன்பு முன்னிலைப்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post சீர்காழி அருகே மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை: 16 வயது சிறுவன் கைது appeared first on Dinakaran.