ARTICLE AD BOX
-ரிஷபன்
அந்த வினோதக் காட்சியை முதலில் என் மகள் தீபாதான் கவனித்தான்
"அய்யோ. அப்பா கீழே இறங்கு."
ஞாயிற்றுக்கிழமை என்பதால் சற்றே காரியங்களில் நிதானம். அதாவது காலை கண் விழிப்பதில் தொடங்கி எட்டு மணி, கண் விழித்தபோது. சூரிய வெளிச்சம் கட்டிலுக்கே வந்துவிட்டது. இன்னமும் தொக்கி நிற்கிற சோம்பல்.
"அப்புறம் மத்தியானம் தூங்க முடியாது. எழுந்துக்கறீங்களா?"
புவனாவின் கிண்டல் வேறு. இனியும் படுப்பதில்லை. எழு, தம்பீ என்று எழுந்தேன். நின்றேன்.
இந்த நிமிடம்தான் தீபாவின் அலறல்.
"அய்யோ, அப்பா, கீழே இறங்கு."
"என்னடி உளர்றே
"கீழே வாப்பா."
கட்டிலை விட்டு எழுந்து நிற்பவனிடம் என்ன பேச்சு இது.
நடந்து அவள் அருகில் போனேன்.
"என்ன தீபு"
"அம்மா."
தீபா அலறிக்கொண்டு சமையலறைக்குள் ஓடியது. புவனாவும் அவளுமாக அடுத்த நிமிடம் வெளியே வந்தார்கள்.
"என்னங்க. உங்களுக்கு என்ன ஆச்சு?"
எனக்குத் தலை சுற்றியது. ஞாயிறும் அதுவுமாய் அரைத் தூக்கத்தில் எழுந்த பிரமையில் இருப்பவனிடம் மேலும் என்ன சோதனை.
"கீழே பாருங்க" - புவனாதான் சொன்னது.
கைலி கட்ட மறந்து விட்டேனா. அவசரமாய்க் குனிந்தால்... கைலி.
"நல்லாக் குனிஞ்சு பாருங்க. கைலியைத் தூக்குங்க..."
கைலியைத் தூக்குவதா, புரியாமல் லேசாக உயர்த்திக் கீழே பார்த்தேன்.
ஹா!
மூச்சு ஒருகணம் நின்றுவிட்டது.
பூமிக்கு - அதாவது தரையிலிருந்து அரை அடி உயரத்தில் நின்றுகொண்டிருந்தேன்.
அவ்வளவுதான். இதயம் வேகமாய்ப் படபடக்க 'ஹாஜ்மூலா' தாத்தா போலக் குதித்து கீழே இறங்க முயற்சித்தேன். ம்ஹும். என்ன குதித்தாலும் அதே அரை அடி உயரத்தில்தான்.
"புவனா, என்னடி இது"
"என்னங்க... எப்படியாவது கீழே வாங்க.''
"எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா? வரமுடியலைடி."
லேசாய்க் கண் தளும்பிவிட்டது.
தீபாவும் புவனாவும் பாதுகாப்பான தூரத்தில் நின்றுகொண்டு பத்துப் பதினைந்து கட்டளைகளைச் சொல்லிக்கொண்டிருக்க, என்னால் முடிந்த அளவு - ஊஹும், முடியவே முடியாத அளவு - முயற்சித்து அந்தரத்திலேயே நின்றேன்.
"ஏய், வயித்தைக் கலக்கறது."
பரிதாபமாய்ப் புலம்பினேன்.
"நேத்து ராத்திரி என்ன சாப்பிட்டீங்க"
“எல்லாம் நீ சமைச்சுப் போட்டதுதான்."
"என் மேல எரிஞ்சு விழத் தெரியும்..."
"அய்யோ அம்மா. இப்பவும் ஏன் அப்பாகூட சண்டை போடறே. பாவம் அப்பா, எப்படியாவது கீழே இறக்கிவிடு."
புவனா விரலைச் சொடுக்கினாள்.
ஐடியா.
"வா, தீபா. நாம ரெண்டு பேரும் ரெண்டு கையையும் புடிச்சுத் தொங்கலாம்."
தொங்கினார்கள். பலன், என் கை வலிதான்.
புவனா பெருமூச்சு விட்டாள்.
தீபா அந்தரக் கால்களின் கீழ் தன் கை விரல்களை ஓட விட்டுப் பார்த்தாள். சுலபமாய் இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் தடங்கலின்றிச் சஞ்சரித்தன.
"நெஜம்மாவே சப்போர்ட் இல்லாம நிக்கிறீங்க அப்பா."
"போதும், உன் சர்டிபிகேட்... நாளைக்கு ஆபீஸ் எப்படிப் போவீங்க."
மீண்டும் கிலியைக் கிளப்பினாள்.
"நம்ம டாக்டரைப் பார்ப்போமா?" என்றேன் தீனமாக.
"இதுக்கு அவர் என்ன பண்ண முடியும். ஜுரமா, தலைவலியா, மாத்திரை தந்து குணப்படுத்த."
"இப்படியே எடக்கு மடக்காப் பேசுங்க. இப்ப என்ன செஞ்சா நீங்க கீழே வருவீங்க.''
"அதே கேள்வியை எத்தனை விதமா நீ கேட்டாலும் எனக்குப் பதில் தெரியலியே!" பழைய சிவாஜி படக்காட்சி போலப் புலம்பினேன்.
"டேய் சிவா... என்னடா பண்றே"
நாணுவின் குரல் கேட்டது.
"அய்யோ, நாணு வந்துட்டான். நாங்க ரெண்டு பேரும் இன்னிக்கு கே.கே. நகர் வரை போகிறதாப் பிளான்."
பதறி எழுந்து அந்தரத்தில் நின்றவனைப் பிடித்து அமர்த்தினாள்.
"பேசாம படுங்க. உடம்பு சரியில்லைன்னு சொல்லிடலாம்.''
நாணு உள்ளே வந்துவிட்டான்.
"என்ன, கிளம்பலியா இன்னும்?''
"சொல்லேண்டி நீயே" என்பதுபோல புவனாவைப் பார்த்தேன்.
"அப்பாக்கு உடம்பு சரியில்லே.." என்றாள் தீபா அவசரமாய்.
"என்ன உடம்பு. ஜொரமா?"
நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.
"சுடலியே..."
"இல்லே.. ஸ்டமக் பிராப்ளம்."
"அப்படியா. நேத்து நல்லாத்தானே இருந்தான் ."
"இன்னிக்குக் காலையிலதான்..."
நாணு என்னையே சந்தேகமாய் முறைத்துப் பார்த்தான்.
"சரி. அந்தக் கவரைக் கொண்டா. நானே கொண்டு போய்க் கொடுக்கறேன்."
சட்டென்று எழுந்துகொள்ள முயன்றவனை தீபா அடக்கிப் படுக்க வைத்தாள். நாணு கவனித்துவிட்டான்.
"என்ன தீபா..."
"ஹிஹி.. ஒண்ணுமில்லே. சும்மா."
"எங்கே வச்சிருக்கீங்க" என்றாள் புவனா.
"மேஜை மேல பாரு..."
அங்கே இல்லை. 'என் கைப்பையில் பாரு'. ஊஹூம். 'கிச்சன்ல வச்சேனா' இல்லை. அட, எங்கே போய்த் தொலைந்தது? என்னையும் மீறி டென்ஷனில் எழுந்து அலமாரியின் உச்சியில் இருந்த கவரை எடுத்துவிட்டேன்.
"இந்தா" என்று நாணுவிடம் நீட்டினேன்.
அதற்குள் புவனாவும் தீபாவும் கோவில் சன்னிதியில் திரை போடுகிற மாதிரி போர்வையின் இருபுறமும் பிடித்துக்கொண்டு ஓடிவந்து என் முன்புறம் மறைத்தார்கள்.
"என்னடா இது.."
"இது ஒரு மாதிரி. தொத்திக்கிற பிராப்ளமாம்... யாரும்கிட்ட போகக் கூடாதாம்."
டீவி சீரியல் பார்க்கிற ஜோரில் தீபாவுக்கு கற்பனை பிய்த்துக்கொண்டது.
நாணு தலையைப் பிய்த்துக்கொண்டான்.
"எனக்கு ஒண்ணுமே புரியலே''
"எனக்கே புரியலே'' என்றேன் அழாதகுறையாய்.
திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டு வெளியேறினான்.
"ஸ்ஸ்... ஹப்பா... தப்பிச்சேன்" என்றேன்.
போர்வையை எடு...
தீபா மீண்டும் என் கால்களைப் பார்த்தாள்.
"எப்படிப்பா முடிஞ்சுது. கால் வலிக்கலே?"
"கேள்வியைப் பாரு. ஏன் வலிக்கப் போவுது. உங்கப்பா இனிமேல் செருப்பே வாங்க வேண்டாம். பேட்டாக்கு அழற பேட்டா மிச்சம்.''
இப்போது என் 'பிரச்னை' எனக்கு ஒரு மாதிரி பழகிப் போய்விட்டது. குறுக்கும் நெடுக்குமாய் நடந்து பார்த்தேன்.
"ஹை... ஜாலியா இருக்கு. இப்படியே உட்கார்ந்தா என்ன ஆகும்?"
"ஆமா. பெரிய ஆராய்ச்சி."
உட்கார்ந்தேன். புவனா கிடக்கிறாள். அபூர்வமாய் வாய்த்த திறனை ஏன் வீண் அடிப்பானேன்.
அந்தரத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்த கோலம்!
"புவனா... அம்மா புவனா"
என் அத்தையின் குரல். கூடவே அப்பாவும் ஊருக்குப் போனவர்கள் திரும்பிவிட்டார்களா?
“ஓடுங்க.. கட்டிலுக்கு”
"எதுக்கு. நம்ம அப்பாதானே."
வந்துவிட்டார்கள். அப்பா கேஷுவலாய் அறைக்குள் பையை வைக்கப்போக அத்தை பெருமூச்சுடன் சோபாவில் அமர்ந்தாள்.
"என்ன பஸ்ஸோ... ஓவர்டேக் பண்ணணும்னு அந்தரத்துல பறக்கற மாதிரி ஓட்டறான். உயிரைக் கையில பிடிச்சுன்டு சீட்டுக்கு மேல வித்தைக்காரன் மாதி உட்கார்ந்திருந்தோம்."
அத்தை பேசிக்கொண்டே போனாள்.
"அத்தே. இவரைப் பாருங்களேன்."
புவனாதான் கேவியது.
''என்னடி ஏன் என்னவோபோல பேசறே?''
அப்பாவும் ஹாலுக்கு வந்துவிட்டார்.
"அப்பா..."
"தாத்தா."
இருவருமாய்ப் புலம்ப, அப்பா பிளஸ் அத்தையின் பார்வைகள் என் பக்கம் திரும்பின
"என்னடா?" ஜோடி நாயனம் போல கத்தினார்கள்.
"தெரியலைப்பா. கார்த்தால் எழுந்தா இந்த இந்த மாதிரி... "
''நம்ம ஃபாமிலில இந்த மாதிரி முன்னால் யாருக்காவது வந்திருக்கா?" என்றாள் அத்தை.
"இது என்ன ஆஸ்த்துமா, டிபி மாதிரி வியாதியா."
"ஏண்டா... ஏதாவது ரோட்டுல மிதிச் சுட்டியா மந்திரிச்சுப் போட்டதை."
"இனிமேல மிதிக்கவே முடியாதுப்பா..." என்றேன் பலவீனமாக.
"இருங்கோ. உங்க ரெண்டு பேருக்கும் காப்பி கொண்டு வரேன்."
புவனா இந்த இடத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று உள்ளே ஓடிவிட்டாள்.
தீபாவுக்கு பாடப் புத்தகத்தில் மனதே பதியவில்லை. என் மீது ஒரு பார்வை, பாடத்தின் மீது ஒரு பார்வை என்று அல்லாடினாள்.
''திருஷ்டி சுத்திப் போடட்டுமாடா?" என்றாள் அத்தை.
"அய்யோ அத்தை... பேசாம இரு.''
“ஏண்டா... பாரதத்துல தர்மரோட தேர் அந்தரத்துல நிக்கும்னு படிச்சிருக்கேன். பொய்யே சொல்லாதவராம். அப்புறம் அஸ்வத்தாமன் செத்ததா பொய் சொல்லப் போக தேர் கீழே வந்துரும். அது மாதிரி.''
அப்பா தவறாமல் டீவி மஹாபாரதம் பார்த்தவர். கையிலே 'வியாசரை' வைத்து ஒப்பிட்டு பார்த்துக்கொண்டு புராணம் பேசினார்.
"அப்பா..."
சுரீலென்று உறைத்தது. பொய்யே சொல்லாதவர். நேற்றிரவு நடந்தது நினைவில் வந்தது.
"என்னங்க.. என்னை உங்களுக்கு ஏங்க ரொம்பப் பிடிக்குது..."
தீபாவுக்கு போர்த்திவிட்டு விடிவிளக்கை ஒளிரவைத்த புவனா என்னருகில் நெருங்கி படுத்துக்கொண்டாள்.
"யார் சொன்னது..."
"குறும்பு..." செல்லமாய்க் கன்னத்தில் இடிக்க கடவாய்ப் பல் ஆடிவிட்டு அமர்ந்தது.
"அம்மா.. தாயே.. கொஞ்சம் மெதுவா..."
"நெஜத்தைச் சொல்லுங்க. எம்மேல உசுருதானே."
மேலே சரிந்ததும் என் 'உசுரு' ஒரு வினாடி நின்று இயங்கியது.
"சேச்சே... அதெல்லாம் ஒண்ணுமில்லே."
"மனசைத் தொட்டுச் சொல்லுங்க."
தொட்டுச் சொன்னேன்.
"பிடிக்கும். அவ்வளவுதான்."
"எப்பவும் விளையாட்டு. உங்களுக்கு..."
"எனக்கு இப்ப தீபாவைத்தான் ரொம்ப பிடிக்கிறது..." என்றேன்.
"போங்க. ஆனாலும் மோசம்..''
''இல்லம்மா. உன்மேல எனக்கு நிறைய விமர்சனம் இருக்கு. நிறைய கேள்விகள், பதில்கள். உன்னை உனக்காகவே பிடிக்கணும்னா, இன்னும் கொஞ்சம் வருஷம் ஆகும். நமக்குள்ளே இந்த சச்சரவுகள் மீறிய அழுத்தமான அடி மனசு நேசம் புலப்பட... புரிஞ்சுக்க."
ஏன் இப்படி டீவி பேட்டியில் குறிப்பிட்ட நடிகர் பேசுகிற தொனியில் பேசினேன் என்று புரியவில்லை.
ஆனால் சொன்னபோது எனக்கே நேர்மை என்று தொனிக்கிற பதிலைச் சொன்னேன். புவனா அதைக் கேலியாக எடுத்துக்கொண்டு தனக்கே இயல்பான இன்னொசன்ஸுடன் என் கையைப் பற்றிக்கொண்டு தூங்கிப் போனாள்.
கடவுளே.. என்னையும் மீறி மனத்தில் பட்டதைச் சொல்லிவிட்டேன். முகமூடியற்று நான்!
அடக் கடவுளே. பொய் சொன்னதால் கீழிறங்கிய காலம் போய் நிஜம் சொன்னதால் மேலே ஏறி விட்டேனா. இப்படியும் நடக்குமா?
"புவனா..."
மூளைக்குள் 'கிளிக்' கேட்டது.
சமையலறைக்குள் சஞ்சரித்தேன்.
"என்ன இது... ஹால்ல அப்பா, அத்தை இருக்காங்க.''
"புவா.. புவிக்குட்டி.. என் கண்ணே... என் செல்லமே..."
"என்னங்க இது... ச்சே அசிங்கம்."
''உம்மேல உசுரு. நீதான் இந்த உலகத்துலேயே படு அழகு. பெங்களூர் போட்டி எல்லாம் குப்பை. அவ உன் கால் தூசு பெறமாட்டா. எலிசபெத் டெய்லர், ரியாஸ் டெய்லர், ஜூஹிசாவ்லா.. எல்லாம் பாவ்லா..." ரிதமிக்காய்ப் பேசப் பேச...
அப்படியே கீழிறங்கித் தரையைத்தொட்டு நின்றேன்.
பின் குறிப்பு:-
கல்கி 05.01.1997இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்