சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்தை வீழ்த்தியது எப்படி..? இந்திய கேப்டன் விளக்கம்

10 hours ago
ARTICLE AD BOX

image courtesy:twitter/@BCCI

துபாய்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்று அரங்கேறிய 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், நியூசிலாந்தும் (ஏ பிரிவு) மல்லுகட்டின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னெர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 30 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இந்நிலையில் 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யரும், ஆல்-ரவுண்டர் அக்ஷர் படேலும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். இறுதி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா போராடினார்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்தியாவின் சுழற்பந்து வீச்சில் மொத்தமான சரணடைந்தது. அந்த அணி 45.3 ஓவர்களில் 205 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் 81 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், "குரூப் சுற்றை உயர்வாக முடித்தது முக்கியம். நியூசிலாந்து நல்ல கிரிக்கெட்டை விளையாடும் அணி. அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி நல்ல முடிவை பெறுவது முக்கியம். 30/3 என பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்தபோது பார்ட்னர்ஷிப் அமைப்பது முக்கியமாக இருந்தது. நாங்கள் எடுத்த ரன்கள் போதுமானதாகவே நான் நினைத்தேன். ஏனெனில் அந்த இலக்கை கட்டுப்படுத்தக்கூடிய தரமான பவுலிங் எங்களிடம் இருக்கிறது.

வருண் சக்கரவர்த்தி தன்னிடம் ஏதோ வித்தியாசமான திறமையைக் கொண்டுள்ளார். எனவே அவரால் எங்களுக்கு கொடுக்க முடியும் என்பதைப் பார்க்க விரும்பினோம். அடுத்தப் போட்டியை பற்றி அதிகம் சிந்திக்கவில்லை என்றாலும் அது நல்ல போட்டி. இந்த சிறிய தொடரில் ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும். எனவே உங்களது தவறுகளை விரைவாக திருத்துவது முக்கியம். ஒரு அணியாக அதை செய்வது எங்களுக்கு முக்கியம் என்பது தெரியும்.

அரைஇறுதி நல்ல போட்டியாக இருக்கும். ஐ.சி.சி. தொடர்களில் அபாரமாக விளையாடிய வரலாற்றை ஆஸ்திரேலியா கொண்டிருக்கிறது. எங்களைப் பொறுத்த வரை போட்டி நாளில் நாங்கள் எதை சிறப்பாக செய்ய வேண்டும் என்பது முக்கியம். அந்த மிகச்சிறந்த போட்டிக்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார்.

Read Entire Article