ARTICLE AD BOX
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள தோட்மா கிராமத்தை சேர்ந்த பமான் காஷ்யப்(29) மற்றும் அனீஸ் ராம் போயம்(38) ஆகிய 2 பேரை நக்சல்கள் படுகொலை செய்தனர். இவர்கள் இருவரும் போலீஸ் இன்பார்மர்களாக செயல்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நக்சல்கள் இந்த கொலையை நிகழ்த்தியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நக்சல்களால் கொலை செய்யப்பட்ட பமான் காஷ்யப், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அபுஜ்மாட் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது சுமார் 38 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் விதமாகவே பமான் காஷ்யப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சத்தீஷ்கார் மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரை 7 பேரை நக்சல்கள் படுகொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.