ARTICLE AD BOX
புழல்: கோடையில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கும் வகையில், தீ விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்குன்றம், புழல், மாதவரம், வடபெரும்பாக்கம், விளாங்காடுப்பாக்கம், புள்ளி லைன், கிராண்ட் லைன், பாடியநல்லூர், நல்லூர், அலமாதி, எடப்பாளையம், சோழவரம் என சென்னை புறநகர சுற்றுவட்டாரங்களில் தின்னர், கழிவு மற்றும் கலப்பட ஆயில் சேகரிப்பு, பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனம், குடோன்கள் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதிகளின்றி ஏராளமான குடோன்கள் இயங்குகின்றன.
அவற்றில், ஒருசில நிறுவனங்களில் திருட்டு மின் இணைப்பு பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை கோடை காலங்களில் ஆங்காங்கே தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற, முறைகேடான தொழிற்சாலைகள் மூலம் சம்பந்தப்பட்ட துறையினருக்கு மாதம் 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியம், தீயணைப்பு துறையினர் மேற்கண்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களை உரிய முறையில் ஆய்வு செய்து, விபத்துகள் ஏற்படாத வகையில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடத்த வேண்டும். அப்படி, நடத்தினால் விபத்துகள் இல்லாத கோடை காலமாக இருக்கும். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், கோடையில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்குன்றம், சோழவரம் சுற்றுவட்டார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post கோடைகால தீ விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு தேவை: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.