ARTICLE AD BOX
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி தொடங்கியது. பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது பூரண கும்பமேளா என்றும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது மகா கும்பமேளா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதுக்கள், துறவிகள், மடாதிபதிகள் பிரயாக்ராஜ் நகரில் வந்து தங்கினர். அவர்கள் முக்கிய தினங்களாக கருதப்படும் அமிர்த ஸ்நான நாட்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, சிறப்பு பூஜைகளை செய்தனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்-நடிகைகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினார்கள். இதுதவிர நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, வழிபாடுகளை நடத்தினார்கள்.
45 நாட்கள் கோலாகலமாக நடந்து வந்த மகா கும்பமேளா, சிவராத்திரி தினமான நேற்றுடன் நிறைவடைந்தது. எனவே நிறைவுநாள் நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் முதலே பிரயாக்ராஜ் நகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. நேற்று ஒரே நாளில் திரிவேணி சங்கமத்தில் 1 கோடியே 32 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். மகா கும்பமேளாவில் 66 கோடியே 21 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மகா கும்பமேளா நிறைவடைந்ததையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஒற்றுமைக்கான மாபெரும் யாகமான மகா கும்பமேளா நிறைவடைந்துள்ளது. பிரயாக்ராஜில் நடந்த ஒற்றுமைக்கான மகா கும்பமேளா 140 கோடி மக்களின் நம்பிக்கை. 45 நாட்களில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரயாக்ராஜில் கூடியது மிகப்பெரியது. நினைத்ததை விட அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இந்தியா இப்போது புதிய சக்தியுடன் முன்னேறி வருகிறது.
மகாகும்பமேளாவுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு சாதனையை படைத்துள்ளது. இது பல நூற்றாண்டுகளுக்கு அடித்தளமிட்டுள்ளது. மகா கும்பமேளா வெற்றிகரமாக முடிந்ததற்கு காரணமாக இருந்த உ.பி. அரசு, துப்புரவு ஊழியர்கள், காவல்துறையினர், ஓட்டுநர்கள் மற்றும் சமையல்காரர்கள் என அனைவரையும் பாராட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.