ஐஏஎஸ் தேர்வுக்குப் பயிற்சி- அரசு மையம் அறிவிப்பு!

3 days ago
ARTICLE AD BOX

சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் மாதிரி ஆளுமைத் தேர்வுக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இம்மையத்தின் போட்டித்தேர்வுகள் கூடுதல் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

”தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில், அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தில் 2024 டிசம்பர் மாதம் நடைபெற்ற மாதிரி ஆளுமைத் தேர்வில் 69 பேர் கலந்துகொண்டனர். பின்னர், இப்பயிற்சி மையத்தில் சிறப்பு அனுமதிபெற்று இந்திய வனப்பணி முதன்மைத் தேர்விற்கு தங்கி பயின்ற 39 ஆர்வலர்களில் 3 மகளிர் உள்பட 8 ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தற்போது, வனப் பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ள தேர்வர்களுக்கும், முதற்கட்ட மாதிரி ஆளுமைத் தேர்வில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் இப்பயிற்சி மையத்தின் மூலம் பணியில் உள்ள- ஓய்வுபெற்ற அகில இந்திய குடிமைப்பணி அலுவலர்கள், தலைசிறந்த பாட வல்லுநர்களைக் கொண்டு வரும் 26, 27, 28 ஆகிய 3 நாள்கள் மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இது, தேர்ச்சி பெற்றுள்ள  தேர்வர்கள், தங்களது ஆளுமைத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும்.

அகில இந்திய வனப்பணி / குடிமைப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த  தேர்வர்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட மாதிரி ஆளுமைத் தேர்வை தவறவிட்டவர்கள் இம்மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி  ஆளுமைத் தேர்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர். 

இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு பங்குபெற விரும்பும் தேர்வர்கள், தங்களது விருப்பத்தினை, www.civilservicecoaching.com  என்ற இணைய தளத்தில் 22.02.2025 முதல் பதிவு செய்துகொள்ளலாம்.

DAF-I & DAF-II விவரங்களைப் பதிவுசெய்து அவற்றை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு கட்டாயம் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.  

இம்மையத்தில் மாதிரி ஆளுமைத்தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு, டெல்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வுக்குச் சென்றுவர  பயணச் செலவுத் தொகையாக ரூ.5,000/- வழங்கப்படும். இம்மையத்தில் முதன்மைத்தேர்வு பயிற்சிபெற்ற ஆர்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், தகவல்களை அறிந்துகொள்ள aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ 93457 66957 என்ற புலன எண்ணிற்கோ (வாட்ஸ் அப்) 044-24621475 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்புகொண்டு   விவரங்களைப் பெறலாம்.

மேலும், 24.02.2025, மாலை 5 மணிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.                                                                                                                

Read Entire Article