ARTICLE AD BOX
விஜய் – அஜித் இருவரும் இணைந்து நடித்த ஒரே பாடமான ராஜாவின் பார்வையிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் இந்திரஜா. இவர் தற்போது தனது திரைத்துறை அனுபவம் குறித்தும், தனது கணவர் குறித்து பேசியுள்ள நேர்காணல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான உழைப்பாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இந்திரஜா. அதன்பிறகு ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்த இவர், மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை திரைப்படத்தில், கஸ்தூரியின் தோழியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்திருந்த இவர், 1995-ம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் ஹீரோயினாக நடிததிருந்தார்.
இந்த படம் தான் இவர் ஹீரோயினாக நடித்து முதல் படம் மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் அஜித் இருவரும் இணைந்து நடித்த ஒரே படமும் இதுதான். அதன்பிறகு தடயம், வேலை ஆகிய படங்களில் நடித்திருந்த இந்திரஜா, கடந்த 1999-ம் ஆண்டு பார்த்திபன் நடிப்பில் வெளியான உன்னருகே நானிருந்தால் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதன்பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாத இந்திரஜா, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடிக்க தொடங்கினார்.
2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இந்திரஜா, அடுத்து அனந்து, பிரேக்கிங் நியூஸ் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் குறைவான படங்களே நடித்திருந்தாலும், விஜய் அஜித் இணைந்து நடித்த ஒரே படத்தில் நாயகியாக நடித்ததால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளார் இந்திரஜா. இவரது கணவர் பிரபல சீரியல் நடிகர் முகமது அப்சர்.
இதனிடையே தனது கணவர் குறித்து பேசியுள்ள இந்திரஜா, எனது கணவர் முகமது அப்சர் என்பது பலருக்கும் தெரியும். நான் சினிமாவில் நடிக்கிறேன். அவர் சீரியலில் நடிக்கிறார். இதை பார்த்து உங்கள் கணவர் சீரியலில் நடிக்கிறாரே வருமானம் குறைவாக இருக்குமே என்று கேட்கிறார்கள். இதில் என்ன இருக்கிறது. அவரும் வேலை பார்க்கிறார். நானும் வேலை பார்க்கிறேன். நான் பார்க்கும் வேலைக்கு அதிக வருமானம் வருவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இருவரும் மனதிற்கு பிடித்த வேலையை செய்துகொண்டு இருக்கிறோம்.
அதிகமாக சம்பளம் வாங்குபவர்கள் தான் பெரியவர் என்கிற மாதிரி எங்கள் வீட்டில் இதுவரைக்கும் இல்லை. ஆனால் வெளியே இருப்பவர்கள் இது போலத்தான் கேட்கிறார்கள். எந்த துறையாக இருந்தாலும் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இதை வைத்தே பிரச்சனை செய்வதற்காக சிலர் வருகிறார்கள் என்று இந்திரஜா கூறியுள்ளார். சன்டிவியின் தாமரை, உறவுகள் சங்கமம், அகல்யா, செல்வி, பொம்மலாட்டம், பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் என பல சீரியல்களில் முகமது அப்சர் நடித்துள்ளார்.
கடந்த வருடத்தில் சன் டிவியில் முடிவுக்கு வந்த பாண்டவர் இல்லம் சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் ரீ- என்ட்ரி கொடுத்த இந்திரஜா, இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்தவர் விஜயகாந்த் தான். அவர் தான் நான் இந்த படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியதாக இந்திரஜா கூறியுள்ளார். எங்கள் அண்ணா படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான மலையாளத்தின் தி சார்னிக் பேச்சிலர் படத்திலும் இந்திரஜா பவானி கேரக்டரில் நடித்திருந்தார்.