ARTICLE AD BOX
செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று 403 விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று சுமார் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதில், ஆரோக்கியம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று நேற்று இரவு இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை அருகே இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மீன்பிடி படகில் எஞ்சின் கோளாறு ஏற்பட்ட நிலையில், கடல் நீரோட்டம் காரணமாக படகு இலங்கை கடற்பகுதிக்குள் சென்றது. மேலும் படகில் நீர்கசிவு ஏற்பட்டு நான்கு மீனவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை வீரர்கள், மீனவர்களின் படகை சோதனை செய்தனர். சோதனையில் படகு எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தது தெரியவந்தது
இதையடுத்து படகு எஞ்சின் கோளாறு சரிசெய்து படகில் இருந்த ஒட்டைகளை சரி செய்து தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களை பத்திரமாக மீட்டு சர்வதேச எல்லை வரை பாதுகாப்பாக வந்து ராமேஸ்வரத்திற்கு இலங்கை கடற்படையினர் அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திற்கு வந்த மீனவர்களிடம், மீன்வளத்துறை, அதிகாரிகள் மற்றும் மெரைன் போலீசார் விசாரணை செய்து நடந்தது குறித்து மீனவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.