ARTICLE AD BOX
கோவையில், குடியிருப்பு பகுதி அருகே சுற்றித் திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், தடாகம், துடியலூர், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வேட்டையன் என்று பெயரிடப்பட்ட காட்டு யானை சுற்றி வருகிறது. இந்த யானை வேலுமணி மற்றும் நடராஜன் ஆகிய இருவரை தாக்கி கொன்றதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில், முத்து மற்றும் சுயம்பு என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால், கும்கி யானைகளுக்கு மதம் பிடித்ததால் அவற்றை மீண்டும் பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் உள்ள முகாமிற்கு கொண்டு சென்றனர்.
அதன் பின்னர், சின்னத்தம்பி என்ற கும்கி யானை கொண்டு கண்காணிப்பு பணிகள் நடத்தப்பட்டது. இதனால், காட்டு யானை ஊருக்குள் வருவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், சமீப நாட்களாக காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வரத் தொடங்கியது.
கோவையில், உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.#Coimbatore #elephant pic.twitter.com/OKQMQicGgf
— Indian Express Tamil (@IeTamil) February 24, 2025
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தடாகத்தில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் வேட்டையன் காட்டு யானை உணவு தேடி அலைந்து கொண்டிருந்தது. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.