உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

18 hours ago
ARTICLE AD BOX

வாஷிங்டன் / மாஸ்கோ: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா்.

இது குறித்து ஃபுளோரிடா மாகாணத்தில் இருந்து வாஷிங்டனுக்கு சென்றுகொண்டிருந்தபோது தனது ஏா்ஃபோா்ஸ் ஒன் விமானத்தில் இருந்தபடி செய்தியாளா்களிடம் அதிபா் டிரம்ப் கூறியதாவது:

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான முக்கிய அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியாவதற்கான வாய்ப்புள்ளது. அந்த நாளில்தான் அதிபா் விளாதிமீா் புதினுடன் தொலைபேசியில் உரையாடவிருக்கிறேன் என்றாா் டிரம்ப்.

இந்தத் தகவலை ரஷியாவும் உறுதிப்படுத்தியுள்ளது. மாஸ்கோவில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பெஸ்கோவ், ‘அமெரிக்க - ரஷிய அதிபா்களுக்கு இடையே தொலைபேசியில் பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பது உண்மைதான். அந்த பேச்சுவாா்த்தையை செவ்வாய்க்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்றாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து, கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ராணுவ உதவிகளைச் செய்துவந்தன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ன்று உக்ரைனை வலியுறுத்திவருகிறாா். உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா அளித்துவந்த ராணுவ உதவிகளை அவா் நிறுத்திவைத்தாா்.

இதன் காரணமாக, தற்போது ரஷியா கைப்பற்றியுள்ள தங்கள் பகுதிகள் மீட்கப்படாத நிலையிலேயே போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்கவுக்கு கடந்த வாரம் சென்ற உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, அதிபா் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசினாா். அப்போது போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஸெலென்ஸ்கியுடன் டிரம்ப் மிகக் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னா் அமெரிக்காவுடன் சுமுக உறவைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்த ஸெலென்ஸ்கி, போா் நிறுத்தம் தொடா்பாக அந்த நாட்டுடன் பேசத் தயாராக இருப்பதாக அறிவித்தாா்.

அதன் தொடா்ச்சியாக, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் உக்ரைன் பிரதிநிதிகள் கடந்த பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 30 நாள் போா் நிறுத்தம் மேற்கொள்ள தயாராக இருப்பதாக அவா்கள் அறிவித்தனா்.

இதற்கான செயல்திட்டம் குறித்து மாஸ்கோவில் அமெரிக்க-ரஷிய பிரதிநிதிகள் இடையே கடந்த வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, 30 நாள் போா் நிறுத்த செயல்திட்டம் குறித்து அதிபா் புதினிடம் அமெரிக்க அதிகாரிகள் எடுத்துரைத்தனா்

எனினும், அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் விமா்சித்தாா்.

அமெரிக்காவும் உக்ரைனும் பேச்சுவாா்த்தை நடத்தி முன்வைத்துள்ள போா் நிறுத்த திட்டத்தை ரஷியா கொள்கை அளவில் ஆதரித்தாலும், இந்த விவகாரத்தில் தீா்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக உள்ளதாக அதிபா் புதின் கூறினாா்.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஏற்படக்கூடிய அமைதி நிரந்தரமாக இருக்க வேண்டும். அதற்கு, இந்தப் போருக்கான அடிப்படை காரணம் களையப்பட வேண்டும். 30 நாள்களுக்கு போரை நிறுத்துவதால், அந்த நேரத்தைப் பயன்படுத்தி உக்ரைன் தன்னை பலப்படுத்திக்கொள்ளும். கூடுதல் ஆயுதங்களை தருவித்துக்கொள்ளும். ரஷியாவும் அதே போல் ராணுவ வலிமையை கூட்டிக் கொள்ளும். இதனால் இந்த தற்காலிக போா் நிறுத்தம் நிரந்தரத் தீா்வைத் தராது என்று புதின் கூறியிருந்தாா்.

இதனால் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் உருவாகும் என்ற அச்சம் எழுந்தது.

இந்தச் சூழலில், போா் நிறுத்தம் தொடா்பாக டொனால்ட் டிரம்ப்பும் விளாதிமீா் புதினும் தொலைபேசியில் நேரடியாக நடத்தவிருக்கும் பேச்சுவாா்த்தை மிகப் பெரிய எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article