ARTICLE AD BOX
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற கூடிய மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை நடந்த இந்த மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 45 நாட்களாக சிறப்பாக நடைபெற்று முடிந்த இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில், எதிர்பார்த்ததற்கும் மேலாக 65 கோடிக்கும் கூடுதலான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், உத்தர பிரதேச சட்டசபையில் பேசிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், 45 நாட்களில் படகோட்டி குடும்பம் ஒன்று ரூ.30 கோடி வருவாய் ஈட்டிய நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
இதுபற்றி அவர் பேசும்போது, படகோட்டி ஒருவரின் குடும்பத்துக்கு 130 படகுகள் இருந்தன. அவற்றின் உதவியுடன் அந்த படகோட்டி, ரூ.30 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். அப்படியென்றால், 45 நாட்களில் ஒவ்வொரு படகும் ரூ.23 லட்சம் அவருக்கு வருவாய் ஈட்டி தந்தது. நாளொன்றுக்கு ஒரு படகிற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.52 ஆயிரம் வரை வருவாய் கிடைத்துள்ளது என கூறினார்.
இதேபோன்று உத்தர பிரதேச சட்டசபையில், 2025-26 ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டையும் அவர் தாக்கல் செய்து பேசினார். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு நலன் பயக்கும் வகையில் அவருடைய அரசின் கீழ் தாக்கல் செய்யப்படும் 9-வது பொது பட்ஜெட்டாகும்.