ARTICLE AD BOX
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்தன. தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி ஆகியோர் உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தனர். கூட்டணி கட்சி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் வேட்பாளருடன் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்காக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் முகாமிட்டு தினந்தோறும் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
அதுமட்டுமின்றி இந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களும் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் தொகுதி முழுக்க சென்று வாக்குகள் கேட்டு வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் வாக்காள பெருமக்களே என்கிற பிரசார ஒலியுடன் ஈரோடு மாநகர வீதிகளில் வாகனங்கள் சென்று வருகின்றன.
பிரசாரம் களைகட்டி காணப்படுகிறது.இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. அதைத்தொடர்ந்து வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.வருகிற 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.