ARTICLE AD BOX
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு இளநரை பாதிப்பு இருக்கிறது. சத்துக் குறைபாடு, மரபியல் கோளாறு, உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் என இளநரை உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
இவ்வாறு இளநரை ஏற்பட்டால் அதனை போக்குவதற்கு எத்தனையோ முயற்சிகளை மக்கள் மேற்கொள்கின்றனர். இவர்களில் நிறைய பேர் தலைமுடியை கலரிங் செய்கின்றனர். எனினும், கலரிங் செய்வதற்கு பயன்படும் ஹேர் டைய்யில் நிறைய இரசாயனங்கள் கலந்திருக்கும்.
இதனால் ஒவ்வாமை மற்றும் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக சிலர் இயற்கையான முறையில் மருதாணி ஹேர்பேக் பயன்படுத்துவார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில், மருதாணி ஹேர்பேக்கை எப்படி பயன்படுத்தலாம் என மருத்துவர் தீபார் தெரிவித்துள்ளார்.
மருதாணியை மட்டுமே அரைத்து அதனை நேரடியாக தலை முடியில் தேய்க்கும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகின்றனர். ஆனால், அவ்வாறு செய்யக் கூடாது என்று மருத்துவர் தீபா குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்யும் போது குளிர்ச்சியின் காரணமாக சிலருக்கு தலை வலி ஏற்படக் கூடும்.
அதன்படி, மருதாணியுடன் சேர்த்து ஒரு கொட்டைப் பாக்கு, 2 வெற்றிலைகள் மற்றும் ஒரு பல் பூண்டு ஆகியவற்றை அரைத்து ஹேர்பேக் தயாரிக்கலாம் என்று மருத்துவர் தீபா அறிவுறுத்துகிறார். பொதுவாகவே, ஹேர்பேக்கை சுமார் 30 நிமிடங்கள் தலையில் அப்படியே வைத்திருப்பதால், அதன் குளிர்ச்சியின் காரணமாக தலை வலி அல்லது சளி பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில், இந்தப் பொருட்களை சேர்த்து மருதாணி ஹேர்பேக் தயாரித்தால் வேறு விதமான பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும். இயற்கையான ஹேர்பேக் என்றாலும் அதனையும் சரியான முறையில் பயன்படுத்தினால் தான் முழு பலன் அளிக்கும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
நன்றி - Cosmo Health Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.