ARTICLE AD BOX
முன்பெல்லாம் வீட்டில் போளி செய்யவே வேலை அதிகம் என்று சொல்வார்கள். இன்று அனைத்து விழாக்கள் விசேஷங்களிலும் போளி எனப்படும் ஒப்பிட்டு சுடச்சுட லைவ் ஆக சுட்டு இலையில் வைக்கிறார்கள். அந்த அளவுக்கு போளி அதிகம் பிரபலமடைந்து வருகிறது.
இப்போது பலாப்பழம் சீசன் தொடங்கிவிட்டது. சக்கரை வள்ளி கிழங்கும் மார்க்கெட்டில் நிறையக் கிடைக்கிறது. இரண்டிலும் போளி செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? சூப்பராகத்தான் இருக்கும் வாருங்கள் செய்யலாம்.
பலாப்பழ போளி
தேவை:
கொட்டை நீக்கிய பலாப்பழம் - 1/2 கிலோ தேங்காய் - 1 நடுத்தர சைஸ்
வெல்லம் - 1/2 கிலோ
ஏலக்காய் - 8
மைதா - 1/4 கிலோ
நல்லெண்ணெய்- 50 மில்லி
நெய் & டால்டா – சுடுவதற்கு
செய்முறை:
முதலில் மைதா மாவை சலித்து தண்ணீர் சிட்டிகை உப்பு நல்லெண்ணெய் சேர்த்து போளி தட்ட ஏற்ற மாதிரி இளக்கமாக பிசைந்து வைத்துக்கொள்ளவும். பலாச்சுளையை பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விடாமல் ஐந்து நிமிடங்கள் சிம்மில் வேகவைத்து இறக்கவும். தேங்காய் துருவலையும் தண்ணீர் விடாமல் அரைத்து அதோடு பலாப்பழத்தையும் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
வெல்லத்தில் சிறிது தண்ணீர் தெளித்து பாகு காய்ச்சி அதில் அரைத்த விழுது மற்றும் பொடித்த ஏலக்காய்த்தூள் சேர்த்து கலவை கட்டியாக வரும் வரை கிளறி ஆறியதும் தேவையான சைஸில் உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு போளிக்கு தயார் செய்வது போல் மைதா மாவை விரித்து நடுவில் பலாப்பழ பூரணத்தை வைத்து மூடி இலேசாகத் தேய்த்து தோசை கல்லில் போட்டு இருபுறமும் நெய்யூற்றி வெந்ததும் எடுக்கவும்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி
தேவை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/2 கிலோ சர்க்கரை - 3 கப் அல்லது தேவைக்கு
நெய் - சுடுவதற்கு ஏற்ப
மைதா மாவு - 2 கப்
ஏலக்காய்- 6
நல்லெண்ணெய்- 25 மில்லி
செய்முறை:
மைதா மாவை போளிக்கு ஏற்ப பிசைந்து வைத்து மூடவும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆவியில் வேகவைத்து தோலுரித்து மசித்து அல்லது ஆட்டிக் கொள்ளவும். சர்க்கரையை கெட்டிக் கம்பி பாகு வைத்து கிழங்கைப் போட்டுக்கிளறி ஏலப்பொடி சேர்த்து உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளவும். போளிக்கு கூறியபடி மைதா மாவை தோசை கல்லில் விரித்து பூரணத்தை வைத்து தட்டி தோசை கல்லில் போட்டு நெய்விட்டு திருப்பி பொன்னிறமாக எடுக்கவும்.
மைசூர் போளி
தேவை:
கடலைப்பருப்பு - ஒரு கப்
சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை - 1 கப்
மைதா - 1 கப்
தேங்காய்த்துருவல்- 1/4 கப்
நல்லெண்ணெய்- 1/4 கப்
நெய்- 50 மில்லி
அரிசி மாவு – சிறிது
செய்முறை:
மைதா மாவை போளிக்கு சொன்னதுபோல் மிருதுவாக பிசைந்து கொள்ளவும். கடலை பருப்புடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து முக்கால் பதமாக வேகவைக்கவும். குழையாமல் பார்த்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை விடாமல் கிளறவும். சிறிது சூடாக இருக்கும்போது மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதில் தேங்காய்த் துருவலை கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
முன் போளிக்கு கூறியபடி மைதா மாவில் நடுவில் உருண்டை செய்த பூரணத்தை வைத்து மூடி வைத்துக்கொள்ளவும். சிறிது அரிசி மாவு மைதாமாவும் கலந்து கொண்டு பூரி பலகையில் பரப்பி அதன் மேல் உருண்டையை வைத்து மெலிதாக விரித்து தோசை கல்லில் போட்டு சிறிதளவு நெய்விட்டு திருப்பி போட்டு இருபுறமும் சிவந்ததும் எடுத்து வைக்கவும். போளிக்கு மைதாவும் டால்டா அல்லது நெய்யும் சுவை தரும்.