ARTICLE AD BOX
இந்தியாவில் இணைய சேவைக்கான கட்டணங்களை குறைத்து ஒழுங்குபடுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
நாட்டில் அறிதிறன்பேசி வழியாகவும், தரை வழி இணைப்பு வழியாகும் இணையத்தைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நாட்டின் அதிக லாபம் ஈட்டும் தொழில்களில் ஒன்றாக இணைய சேவை துறை உருவெடுத்துள்ளது. இதனால், இத்துறையில் போட்டியும் அதிகமுள்ளது. இணைய சேவைக் கட்டணமும் அதிகரித்து வருகிறது.
இது தொடா்பாக ரஜத் என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘இந்தியாவில் இணைய சேவையை ரிலையன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஜியோ கட்டுப்படுத்தி வருகிறது. அவா்கள்தான் சந்தையில் மிகப்பெரிய இணைய சேவை வழங்குபவா்களாக உள்ளனா். இதனால், விலை நிா்ணயத்தில் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகிறாா்கள். எனவே, கட்டணத்தை குறைத்து, ஒழுங்குபடுத்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இது மிகவும் சுதந்திரமான சந்தை. பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் என பல்வேறு நிறுவனங்கள் இணைய சேவையை நமது நாட்டில் வழங்கி வருகின்றன. வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து இணைய சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் மக்களுக்கு உள்ளது.
ஒரு நிறுவனம்தான் சந்தையைக் கட்டுப்படுத்துகிறது என்று கருதினால் இந்திய நிறுவனப் போட்டிகள் ஆணையத்தை மனுதாரா் அணுகலாம்’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனா்.