ARTICLE AD BOX
Published : 05 Mar 2025 09:23 AM
Last Updated : 05 Mar 2025 09:23 AM
ஆஸ்திரேலியாவை ‘நாக் அவுட்’ சுற்றில் இந்தியா வீழ்த்தியது எப்படி?

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. துபாயில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அந்த அணியில் மேத்யூ ஷார்ட், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோருக்கு பதிலாக கூப்பர் கானொலி, தன்வீர் சங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
ஆட்டத்தின் முதல் பந்தை இந்தியாவின் முகமது ஷமி வைடாக வீசினார். இதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்தை ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹட் லெக் திசையில் அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது மட்டையில் பட்டு ஷமியை நோக்கி வந்தது. அதை வலது கையால் ஷமி பிடிக்க முயன்ற போது நழுவி கீழே விழுந்தது.
இதனால் ஹெட் டக்-அவுட் ஆவதில் இருந்து தப்பித்தார். முதல் இரு ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 3 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ஷமி வீசிய அடுத்த ஓவரில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் கூப்பர் கானொலி, கே.எல்.ராகுலிடம் பிடிகொடுத்து வெளியேறினார் இந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தது. இதையடுத்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்க டிராவிஸ் ஹெட் மட்டையை சுழற்றினார்.
ஹர்திக் பாண்டியா வீசிய 4-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் பறக்கவிட்ட டிராவிஸ் ஹெட்,’ முகமது ஷமி வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விரட்டி அசத்தினார். தொடர்ந்து குல்தீப் யாதவ் வீசிய 8-வது ஓவரில் நேர் திசையில் சிக்ஸர் விளாசினார்.
அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்ற போது லாங் ஆஃப் திசையில் ஷுப்மன் கில்லிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்கிய மார்னஷ் லபுஷேன் 36 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்களும் ஜோஷ் இங்லிஷ் 12 பந்துகளில் 11 ரன்களும் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தனர்.
27 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் என்ற நிலையில் ஸ்டீவ் ஸ்மித்துடன், இணைந்த அலெக்ஸ் கேரி அற்புதமாக விளையாடினார். நிதானமாக விளையாடி தனது 35-வது அரை சதத்தை கடந்த ஸ்டீவ் ஸ்மித் 96 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி வீசிய தாழ்வான ஃபுல்டாஸில் போல்டானார்.
இதையடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 7 ரன்னில் அக்சர் படேல் பந்தில் போல்டானார். பென் ட்வார்ஷுய்ஸ் 19 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்தில் வெளியேறினார். தனது 12-வது அரை சதத்தை நிறைவு செய்த அலெக்ஸ் கேரி 57 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
தொடர்ந்து நேதன் எலிஸ் 10 ரன்னில் முகமது ஷமி பந்திலும், ஆடம் ஸாம்பா 7 ரன்னில் ஹர்திக் பாண்டியா பந்திலும் நடையை கட்ட ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினார். வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
265 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா வழக்கம் போல் அதிரடி தொடக்கம் கொடுத்தார். அதேவேளையில் நிதானமாக விளையாடிய ஷுப்மன் கில் 11 பந்தில் 8 ரன்கள் எடுத்த நிலையில் பென் ட்வார்ஷுய்ஸ் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய பந்தை கால்கள் நகர்வு இல்லாமல் விளையாடிய போது போல்டானார்.
அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 29 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் கூப்பர் கானொலி பந்தை விளாச முயன்றபோது எல்பிடபிள்யூ ஆனார். 7.5 ஓவர்களில் 43 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் விராட் கோலியுடன் இணைந்த ஸ்ரேயஸ் ஐயர் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். இதனால் இந்திய அணி 19.4 ஓவரில் 100 ரன்களை கடந்தது. விராட் கோலி 53 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார்.
நிதானமாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் 62 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆடம் ஸாம்பா பந்தில் போல்டானார். விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 111 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து அக்சர் படேல் களமிறங்கினார். விராட் கோலி 51 ரன்களில் இருந்த போது கூப்பர் கானொலி வீசிய பந்தை லாங் ஆன் திசையில் அடித்தார். அப்போது கிளென் மேக்ஸ்வெல் டைவ் அடித்து ஒற்றை கையால் பிடிக்க முயன்றார். ஆனால் பந்து நழுவியது.
அதிரடியாக விளையாட முயன்ற அக்சர் படேல் 30 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் எலிஸ் பந்தில் ஆஃப் ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் களமிறங்கினார். இந்திய அணி 40 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்தது. கடைசி 10 ஓவர்களில் அணியின் வெற்றிக்கு 65 ரன்கள் தேவையாக இருந்தன.
தன்வீர் சங்கா வீசிய 41-வது ஓவரில் 8 ரன்களும், பென் ட்வார்ஷுய்ஸ் வீசிய அடுத்த ஓவரில் 9 ரன்களும் சேர்க்கப்பட்டன. ஆடம் ஸாம்பா வீசிய 43-வது ஓவரில் கே.எல்.ராகுல் மிட் ஆன் திசையில் சிக்ஸர் விளாசினார். இதே ஓவரின் 4-வது பந்தை விராட் கோலி லாங் ஆன் திசையில் விளாசிய போது பென் ட்வார்ஷுய்ஸிடம் கேட்ச் ஆனது.
விராட் கோலி 98 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் சேர்த்தார். அப்போது வெற்றிக்கு 44 பந்துகளில் 41 ரன்கள் தேவையாக இருந்தன. இதையடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். 44-வது ஓவரை வீசிய நேதன் எலிஸ் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். தன்வீர் சங்கா வீசிய அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் பறக்கவிட்டார். இதனால் 5 ஓவர்களில் 28 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.
46-வது ஓவரை வீசிய நேதன் எலிஸ் ஒரு ரன்னை மட்டுமே வழங்க இந்திய அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. ஆனால் ஆடம் ஸாம்பா வீசிய அடுத்த ஓவரின் கடைசி இரு பந்துகளை ஹர்திக் பாண்டியா சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு மிரளச் செய்தார். இதனால் 18 பந்துகளில் 12 ரன்கள் தேவை என அழுத்தம் குறைந்தது.
நேதன் எலிஸ் வீசிய 48-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஹர்திக் பாண்டியா 5-வது பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆன் திசையில் கிளென் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் ஆனது. ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் சேர்த்தார்.
அப்போது வெற்றிக்கு 6 ரன்களே தேவையாக இருந்தன. மேக்ஸ்வெல் வீசிய 49-வது ஓவரின் முதல் பந்தை கே.எல்.ராகுல் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசி அசத்தினார். முடிவில் இந்திய அணி 48.1 ஓவரில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 34 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 2 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நேதன் எலிஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 14 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் வீழ்த்தியுள்ளது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் அந்த அணியை இந்தியா வென்றிருந்தது.
இன்றைய ஆட்டம்
2-வது அரை இறுதி
தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து
நேரம்: பிற்பகல் 2.30, இடம்: லாகூர்
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை