ARTICLE AD BOX
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பொன்முடி, கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் பொன்முடி. இவர் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் முதலில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த நிலையில் தற்போது வனத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் 2006 முதல் 2011ம் ஆண்டு வரையான திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது விழுப்புரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, மனைவி விசாலாட்சி உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ததை அடுத்து 2023ம் ஆண்டு ஜூலை மாதம் அமலாக்கத்துறை அதிரடிஅவர்களது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது.

இந்த வழக்கில் செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த தொகையை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் திமுக முன்னாள் எம்.பி. கவுதம சிகாமணி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ் பிசினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகிய 6 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் 26 கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தது.

அதில் அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, கே.எம்.ஸ்பெஷலிட்டி மருத்துவமனை அதன் நிர்வாக இயக்குநர் அசோக் சிகாமணி, கே.எஸ்.மினரல்ஸ் நிறுவனம், பி.ஆர்.எம் நிறுவனம் அதன் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.ராஜ மகேந்திரன் ஆகியோர் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்த கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன் அமலாக்கத்துறை தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள பொன்முடி, மற்றும் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் மார்ச் 19ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.