ARTICLE AD BOX
வாஷிங்டன் : வெளிநாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறியுள்ள மக்களில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட உரிமை திரும்பப் பெறப்படுவதாக அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் வெள்ளிக்கிழமை(மார்ச் 21) அறிவித்துள்ளது.
இந்த அதிரடி உத்தரவால் கியூபா(1,10,900), ஹைதி(2,13,000), நிகாராகுவா(93,000), வெனிஸூலா(1,20,700) ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து குடியேறியுள்ள 5,32,000 பேர் பாதிக்கப்படுவர். மேற்கண்டோர் அனைவரும் முந்தைய அமெரிக்க அதிபரான பைடன் ஆட்சியில் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டதொரு திட்டத்தின்கீழ் அமெரிக்காவில் சட்ட அங்கீகாரத்துடன் குடியேரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார ரீதியாகவும் பிற அரசியல் காரணங்களாலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள கியூபா, ஹைதி, நிகாராகுவா, வெனிஸூலா ஆகிய 4 நாடுகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு குடியேற விரும்புவோர், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து 2 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் சட்ட அனுமதியுடன் தங்கிக்கொள்ள முந்தைய அமெரிக்க அதிப்பரான ஜோ பைடனின் அரசு மனிதாபிமான நடவடிக்கையாக ‘சி.எச்.என்.வி’ என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி, மேற்கண்ட நாடுகளிலிருந்து வரும் மக்கள் ஒரு மாதத்துக்கு 30,000 பேர் என்ற விகிதத்தில் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மேற்கண்ட இடம்பெயர்ந்த மக்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை பறிப்பதாக டிரம்ப் நிர்வாகம் முக்கிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இதனையடுத்து, ‘சி.எச்.என்.வி’ திட்டத்தின்கீழ் அமெரிக்காவுக்குள் வெளிநாட்டவர்கள் குடியேறுவதை தடை செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இந்த நிலையில், ‘சி.எச்.என்.வி’ திட்டத்தின்கீழ் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தோருக்கு வழங்கப்பட்ட சட்ட அங்கீகாரம் செவ்வாய்க்கிழமை(மார்ச் 25) முதல் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அவர்கள் அனைவரும் இடம்பெயர்ந்த மகக்ளுக்கான சட்டப்பூர்வ அனுமதியை புதிதாக பொறுப்பேற்றிருக்கும் டிரம்ப் அரசிடமிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளவில்லையெனில் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குப் பின் அமெரிக்காவில் இருக்க அனுமதி மறுக்கப்படும்.
இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ள சுமார் 2,40,000 உக்ரேனிய மக்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள சட்ட அங்கீகாரத்தையும் ரத்து செய்ய டிரம்ப் ஆலோசித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.